ஐபிஎல் போட்டியில் பங்கேற்றுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்து போட்டி நடுவர் குழு அறிவித்துள்ளது.
பந்து வீசுவதற்கு குறிப்பிட்ட நேரத்தைவிட கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டதையடுத்து, இந்த அபராதம் ஆர்சிபி கேப்டன் விராட் கோலிக்கு விதிக்கப்பட்டுள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
துபாயில் ஐபிஎல் போட்டியின் 7-வது லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 5 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் குவித்தது. 207 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணி 17 ஓவர்களில் 109 ரன்களுக்கு ஆட்டமிழந்து 97 ரன்களில் தோல்வி அடைந்தது.
இந்தப் போட்டியில் பந்து வீசுவதற்கு ஆர்சிபி அணியினர் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைவிட கூடுதல் நேரத்தை எடுத்துக்கொண்டனர். இதையடுத்து, ஐபிஎல் விதிமுறைகளை மீறியதற்காக ஆர்சிபி கேப்டன் விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஏற்கெனவே மோசமான தோல்வியால் நொந்துபோயுள்ள ஆர்சிபி கேப்டன் விராட் கோலிக்கு இந்த அபராதம் கூடுதலாகப் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் ராகுலின் இரு கேட்ச்சுகளை விராட் கோலி நழுவவிட்டார்.
17-வது ஓவரில் ஒரு கேட்ச்சையும், 18-வது ஓவரில் ஒரு கேட்ச்சையும் கோலி நழுவவிட்டார். அப்போது கே.எல்.ராகுல் சதத்தை நிறைவு செய்யவில்லை. கோலி கேட்ச்சைவிட்டதற்கான தண்டனையைம் ஆர்சிபி அணியினர் நேற்று அனுபவித்தனர். கடைசி 4 ஓவர்களில் மட்டும் பஞ்சாப் அணியினர் 74 ரன்கள் சேர்த்தனர்.