கரோனா பாதிப்பு காரணமாக பயிற்சி, தயாரிப்புகளில் வீரர்களுக்கான, பயிற்சியாளர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது.
இதில் 60 வயதுக்கும் மூத்தோர் பயிற்சி போன்றவற்றில் கலந்து கொள்ளக் கூடாது ஏனெனில் கோவிட்-19 அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சந்தர்பங்கள் அதிகம் என்று உலகச் சுகாதார அமைப்பு, மத்திய சுகாதார அமைச்சக வழிகாட்டுதல்களை பிசிசிஐ பின்பற்றி உத்தரவிட்டுள்ளது.
ஆனால் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அருண் லால் இதனை ஏற்கவில்லை. இவர் ஏற்கெனவே புற்றுநோயிலிருந்து மீண்டவர், எனவே நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக இருக்கும் வீரர்கள், பயிற்சியாளர்கள், பயிற்றுநர்கள், 60 வயதுக்கும் மூத்தோர் கலந்து கொள்ளக் கூடாது என்று பிசிசிஐ மிகச்சரியாகவே விதிமுறை வகுத்துள்ளது.
இந்நிலையில் பெங்கால் கோச் அருண் லால் அதிருப்தி அடைந்து கூறியதாவது, “பிரதமருக்கு வயது 69, அவர் இந்த வயதில் நாட்டையே வழிநடத்துகிறார், அவரை பதவி விலக வேண்டும் என்று யாராவது வலியுறுத்துகிறார்களா?
நான் பெங்கால் பயிற்சியாளரோ இல்லையோ, ஒரு நபராக நான் என் வாழ்க்கையை வாழ்ந்தாக வேண்டும். எனக்கு 65 வயதாகி விட்டது எனவே கதவை தாழிட்டுக் கொண்டு அடுத்த 30 ஆண்டுகளுக்கு அறையில்தன் உட்கார வேண்டும் என்று கூற முடியுமா?
சமூக விலகல், கை கிருமி நாசினி பயன்படுத்தல் முகக்கவசம் அணிதல் என்று அனைத்தையும் செய்கிறேன்.
எனக்கு 60 வயதுக்கும் மேல் என்பதாலேயே நான் தனிமைக்குச் செல்ல வேண்டும் என்றால் என்னால் முடியாது. வைரஸுக்கு 59க்கும் 60க்கும் வித்தியாசம் தெரியுமா?
நான் வலிமையாக இருக்கிறேன், நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறேன்” என்று ஆவேசமாகப் பேசுகிறார் அருண் லால்.