ஷதாப் கான். 
விளையாட்டு

பாக். அணியில்  3 வீரர்கள், தென் ஆப்பிரிக்க அணியில் 7 பேருக்கு கரோனா பாசிட்டிவ்

செய்திப்பிரிவு

தென் ஆப்பிரிக்க அணியில் 7 பேருக்கும், பாகிஸ்தான் அணியில் 3 வீரர்களுக்கும் கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் சார்பில் ஒப்பந்த வீரர்கள், பணியாளர்கள் உட்பட 100 பேருக்கும் மேல் கரோனா சோதனை நடத்தப்பட்டது. கரோனா சோதனையில் 7 பேருக்கு கரோனா பாதிப்பு தெரியவந்துள்ளது.

ஆனால் தென் ஆப்பிரிக்க நாட்டு மருத்துவ விதிகளின் படி கரோனா பாதிப்பு நோயாளிகள் பெயர்களை வெளியிடக்கூடாது. சம்பந்தப்பட்டவர்களுக்குத் தகவல் தெரிவித்து விட்டதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஷதாப் கான், ஹைதர் அலி, மற்றும் ஹாரிஸ் ராவ்ஃப் ஆகிய வீரர்களுக்கு கரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது, இதனை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இந்த மூன்று வீரர்களுக்கும் கரோனா அறிகுறிகளே இல்லை, டெஸ்ட் செய்த பிறகுதான் தொற்று இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது. இந்த மூவரும் சுயதனிமைப் படுத்தலுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இமாத் வாசிம், உஸ்மான் சின்வாரி ஆகிய வீரர்களுக்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் அவர்களுக்கு தொற்று இல்லை என்று தெரிந்தது.

ஜூன் 28ம் தேதி இங்கிலாந்து தொடருக்குச் செல்கிறது பாகிஸ்தான் அணி, 3 டெஸ்ட் 3 டி20யில் ஆடுகிறது.

SCROLL FOR NEXT