விளையாட்டு

கரோனா வைரஸ் அச்சுறுத்தல்: ஐபிஎல் நடக்குமா? - கங்குலி விளக்கம்

செய்திப்பிரிவு

மக்கள் அதிகம் பேர் பொது இடங்களில் கூட வேண்டாம் என்று கரோனா பாதிக்கப்பட்ட நாடுகளில் முடிவெடுக்கப்பட்டுள்ள நிலையில் மார்ச் 29ம் தேதி ஐபிஎல் தொடங்குகிறது.

ஹோலி கொண்டாட்டங்களே வேண்டாம் என்று கூறும் நிலையில் ஐபிஎல் ரொம்ப அவசியமா என்ற கேள்விகளுக்கு இடையில், பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் ஐபிஎல் போட்டிகள் பிரமாதமாக நடைபெறும் என்கிறார்.

மொத்தம் 85 நாடுகளில் பரவியுள்ளது இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது, வெளிநாடுகளிலிருந்து வருவோர் மூலம் பரவுவதால் ஐபிஎல் போட்டிகளைக் காண அயல்நாடுகளிலிருந்து வருவோர் மூலம் வைரஸ் பரவினால் என்ன செய்வது?

மேலும் அயல்நாட்டு வீரர்கள், உதவி பயிற்சியாளர்கள், பயிற்சியாளர்கள் என்று அயல்நாட்டினர் வருகை ஐபிஎல் போட்டிகளில் அதிகமே, ஆகவே கரோனா அச்சுறுத்தல் இருக்கவே செய்கிறது.

ஆனால் பரவாமல் தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுமோ அது எடுக்கப்படும் என்கிறார் கங்குலி. “ஐபிஎல் நடக்கும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் ஐபிஎல் நடக்கும்” என்கிறார் கங்குலி.

இத்தாலியில் சீரி ஏ கால்பந்து போட்டிகள் ரசிகர்கள் இல்லாமலேயே மூடப்பட்ட கதவுகளுக்குள் நடைபெற்று வருகின்றன.

உலகம் முழுதும் விளையாட்டுப் பந்தயங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் ஐபிஎல் நடத்தியே தீருவேன் என்று கங்குலி கூறுவதை அரசு எப்படிப் பார்க்கும் என்பது போகப் போகத் தெரியும்.

SCROLL FOR NEXT