நியூஸிலாந்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளிலும் உலகின் நம்பர் 1 டெஸ்ட் அணி என்ற தகுதிக்கேற்ப ஆடுவோம். இதன் மூலம் 2 வெற்றிகளுடன் 120 புள்ளிகளைப் பெற்று 2021 லார்ட்ஸ் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியில் ஆடுவதே இலக்கு என்று இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
இந்தியா தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டித் தொடரில் 360 புள்ளிகள் பெற்று முதலிடம் வகிக்கிறது.
ஆங்கில நாளேட்டுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
லார்ட்ஸில் இறுதி போட்டியில் ஆட 100 புள்ளிகள் தேவை. இந்த ஆண்டு 6 டெஸ்ட் போட்டிகள் உள்ளன, நியூஸிக்கு எதிராக 2, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4. இதில் 2 டெஸ்ட்களில் வெற்றி பெற்றால் இறுதிப்போட்டியில் ஆட நல்ல நிலையில் இருப்போம் என்று கருதுகிறேன். எனவே இது ஒரு குறிக்கோள்.
இன்னொரு குறிக்கோள் உலகின் நம்பர் 1 அணி என்ற தகுதிக்கேற்ப ஆடுவது. ஏனெனில் இந்த அணி இதில்தான் மற்றவற்றை விட அதிக நம்பிக்கை வைத்துள்ளது. டெஸ்ட் போட்டிகளில் இதைத்தான் நாங்கள் எதிர்நோக்குகிறோம்.
பிரிதிவி ஷா, ஷுப்மன் கில் இருவருமே உற்சாகமூட்டக்கூடிய திறமைசாலிகள். யாருக்கு வாய்ப்புக் கிடைக்கும் என்பதை விட இவர்கள் இருவருமே இங்கு இருக்கின்றனர். தேசிய அணியில் இடம்பெற்றுள்ளனர், இந்த நிலையிலிருந்து அவர்களுக்கு வானமே எல்லை.
ஷுப்மன் கில் அசாதாரண திறமை கொண்டவர், பேட்டிங் அணுகுமுறை தெளிவானது, பாசிட்டிவ் மனநிலையில் ஆடுகிறார். 20-21 வயதே ஆகும் ஒரு வீரருக்கு இது உற்சாகமான காலக்கட்டமாகும்.
ஷா, கில், ஆகியோர் ஒரே கிரிக்கெட் பள்ளியிலிருந்து வருபவர்கள், எனவே புதியப் பந்தை எதிர்கொள்வதில் அதிக ஆர்வமுள்ளவர்கள். பிரிதிவி ஷா, ஷுப்மன் கில் இடையே போட்டி நல்லதுதான், என்றார்.
பயிற்சி ஆட்டத்தில் இன்று ஷா டக் அடிக்க, அகர்வால் 1, ஷுப்மன் கில் டக். ஸ்காட் குக்கெலீனிடம் இவர்கள் ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.