களநடுவர் ரன் அவுட் கொடுக்க வேண்டும் அல்லது டிவி நடுவரை உடனே அழைத்துக் கேட்க வேண்டும், ஆனால் மைதானத்தில் உள்ள பெரிய திரையில் ரீப்ளேயைப் பார்த்துவிட்டு 3வது நடுவரை ரன் அவுட்டுக்கு தீர்ப்பு சொல்ல அழைப்பதா என்ற சர்ச்சை சென்னை ஒருநாள் போட்டியில் ஜடேஜா ரன் அவுட்டில் ஏற்பட்டுள்ளது.
இந்திய இன்னிங்சின் 48வது ஓவரில் கீமோ பால் பந்தில் ஒரு விரைவான சிங்கிளை ஜடேஜா எடுக்க முயற்சி செய்தார். பவுலர் முனையில் பந்து நேரடியாக ஸ்டம்பை அடித்தது. ரீப்ளேக்களில் ஜடேஜா கிரீசுக்கு வெளியே இருந்தது உண்மைதான், அதில் சந்தேகமில்லை. கள நடுவர் ஷான் ஜார்ஜ் ஒன்று அவுட் கொடுத்திருக்க வேண்டும், அல்லது வழக்கம் போல் உடனேயே 3வது நடுவரை அழைத்திருக்க வேண்டும்.
ஆனால் பேசாமல் இருந்து விட்டு மைதானத்தின் பெரிய திரையில் ரீப்ளேயில் ஜடேஜா கிரீசுக்கு வெளியே இருந்ததைப் பார்த்து விட்டு 3வது நடுவரை ரெஃபர் செய்தார் ஷான் ஜார்ஜ்.
நேரடியாக ஸ்டம்பை அடித்த ராஸ்டன் சேஸ் மட்டும் மெலிதான முறையீட்டை எழுப்பினார். 21 ரன்களில் ஜடேஜா ரன் அவுட்.
அவுட் தீர்ப்பு சரிதான், ரன் அவுட் கொடுக்காமல் இருந்திருந்தால் இன்னும் பெரிய சர்ச்சையாகியிருக்கும். ஆனால் தாமதமாக 3ம் நடுவரை அழைத்து அவுட் கொடுத்தது விராட் கோலிக்கு திருப்தியளிக்கவில்லை என்று அவரது உடல்மொழி மூலம் தெரிந்தது.