விளையாட்டு

இயக்குநராக பொறுப்பேற்றவுடனேயே கங்குலி ஸ்டைலில் நம்பிக்கையளிக்கும் கிரேம் ஸ்மித்

செய்திப்பிரிவு

பிசிசிஐயின் தலைவராக கங்குலி நியமிக்கப்பட்டதையடுத்து இந்தியா அதுவரை புறமொதுக்கி வந்த பகலிரவு டெஸ்ட் போட்டி சாத்தியமானது. அதே போல் அணித்தேர்வு குறித்தும் ரவிசாஸ்திரி, விராட் கோலியிடம் பேசப்போவதாகவும் கங்குலி தெரிவித்திருந்தார், அவரது பாணியிலேயே தென் ஆப்பிரிக்க கிரிக்கெட்டின் இயக்குநராக முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் சிலபல முக்கிய மாற்றங்களை முன்னெடுத்துள்ளார்.

அதில் முக்கியமான ஒன்று தென் ஆப்பிரிக்க அணியின் இடைக்கால பயிற்சியாளராக முன்னாள் விக்கெட் கீப்பர் மார்க் பவுச்சர் அறிவிக்கப்படவுள்ளார். இதைவிடவும் முக்கியமான முன்னெடுப்பு தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக ஜாக் காலீஸை நியமிக்கும் நடைமுறைகளையும் முன்னெடுத்து வருகிறார்.

அதே போல் முன்னாள் சர்வதேச கிரிக்கெட் வீரர்களையும் தென் ஆப்பிரிக்க ஏ அணியில் பயிற்சிப்பொறுப்பில் நியமிக்கவும் ஸ்மித் முடிவெடுத்து அதனடிப்படையில் ஆஷ்வெல் பிரின்ஸ் தென் ஆப்பிரிக்க ஏ அணி விவகாரங்களையும் கவனிப்பார்.

அதே போல் இம்மாதம் 26ம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் தொடங்குகிறது, அதற்கான அணியிலும் சிலபல புதுமைகளை ஸ்மித் புகுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறுகிய காலப் பதவிதான் என்றாலும் வீழ்ந்து கிடக்கும் தென் ஆப்பிரிக்க அணியையும் அதன் கறைபடிந்த வாரியத்தையும் மீண்டும் நல்ல வழியில் திரும்புவதற்கு கிரேம் ஸ்மித் வழிவகுப்பார் என்று அங்கு அவர் மீது அபார நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT