விளையாட்டு

மைதானத்திலேயே சக வீரருக்கு அடி உதை:  வங்கதேச வீரர் ஷஹாதத் ஹுசைனுக்கு 5 ஆண்டுகள் தடை 

செய்திப்பிரிவு

வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் ஷஹாதத் ஹுசைன் உள்ளூர் போட்டி ஒன்றில் சகவீரர் அராபத் சன்னி ஜூனியர் என்ற வீரரை மைதானத்திலேயே அடித்து உதைத்ததால் அவருக்கு 5 ஆண்டுகள் தடை விதித்தது வங்கதேச கிரிக்கெட் வாரியம்.

குல்னாவில் நடைபெற்ற தேசிய கிரிக்கெட் லீக் போட்டி ஒன்றில் ஷஹாதத் ஹுசைன் சக வீரர் அராபத் சன்னியை கடுமையாகத் தாக்கினார்.

அதாவது தனக்காகப் பந்தை தேய்த்து பளபளப்பு ஏற்றித் தருமாறு ஷஹாதத் ஹுசைன் கேட்க அதற்கு அராபத் சன்னி மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து வாக்குவாதம் முற்ற அடிதடியில் முடிந்து ஹுசைன் சக வீரரையே தாக்கியுள்ளார்.

இதனையடுத்து ஷஹாதத் ஹுசைனுக்கு 1,00,000 டாக்காக்கள் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் 5 ஆண்டுகள் இவருக்குத் தடை விதிக்கப்பட்டது, இரண்டு ஆண்டுகள் சஸ்பெண்டட் தண்டனையாகும்.

ஷஹாதத் ஹுசைன் வங்கதேசத்துக்காக 38 டெஸ்ட் போட்டிகள் 51 ஒருநாள் போட்டிகள் 6 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார்.

இவர் ஒரு கடும் கோபக்காரர் என்பது ஏற்கெனவே ஒரு சம்பவத்தில் நிரூபிக்கப்பட்டது, வீட்டு வேலைக்காரப் பணியாளரை அடித்ததாக இவர் 2015-ல் கைது செய்யப்பட்டது முதல் அணிக்குத் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT