விராட் கோலி இந்திய அணியின் எதிர்காலம், அவர் அதற்கான திறமைகளைக் கற்றுக் கொண்டு வருகிறார் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சியில் அவர் இன்று பேசிய போது, “விராட் கோலிதான் இந்தியாவின் எதிர்காலம் என்பது தெளிவு. தனது மதிப்பை நிரூபிக்கும் அனைத்து திறமைகளும் அவரிடத்தில் உள்ளது.
உலகக் கோப்பை போட்டிகளில் அவர் சரியாக ஆடததால் அவரது திறமைகளை அவரிடமிருந்து பறித்து விடமுடியாது.
கோலியின் உண்மையான மதிப்பு 2019-ல் நடைபெறும் அடுத்த உலகக் கோப்பையின் போது தெரியவரும்.
சர்ச்சைகள் விவகாரத்தில் அதனைக் கையாள்வதில் கோலி நிச்சயம் முதிர்ச்சியடைவார். சர்ச்சைகளை இப்போது போலல்லாமல் இன்னும் கொஞ்சம் மேம்பட்ட நிலையில் கையாள்வார் என்று எதிர்பார்க்கலாம்” என்றார்.
நேற்று, அனுஷ்கா சர்மா விவகாரம் குறித்து ஊடகங்கள், ரசிகர்களின் எதிர்வினை ஆகியவற்றை கடுமையாக சாடியிருந்தார் கோலி. ஆனால் இவையெல்லாம் அவரின் ஆட்டத்தை பாதிக்காது. நிச்சயம் அவர் இந்தியாவின் எதிர்காலமே என்கிறார் டீன் ஜோன்ஸ்