விளையாட்டு

உலக சாதனைப் படைத்தார் ரோஹித் சர்மா: ஒரே உலகக்கோப்பையில் 5 சதங்கள் அடித்த முதல் வீரர்

செய்திப்பிரிவு

ஹெடிங்லேயில் இலங்கைக்கு எதிரான உலகக்கோப்பைப் போட்டியில் சதமெடுத்ததன் மூலம் இந்திய தொடக்க வீரர் ரோஹித் சர்மா ஒரே உலகக்கோப்பை தொடரில் 5 சதங்கள் எடுத்த முதல் வீரர் என்ற உலக சாதனையை நிகழ்த்தினார். இந்த அசாதாரண சாதனையில் அவர் சங்கக்காராவின் 2015 உலகக்கோப்பையின் 4 சதங்கள் சாதனையை உடைத்தார்.

ரோஹித் சர்மா 92 பந்துகளில் 102 ரன்களை எடுத்த போது இந்த அரிய உலக சாதனையை நிகழ்த்தினார். கடந்த சதத்தின் போது சங்கக்காரா சாதனையை சமன் செய்தார் ரோஹித் சர்மா. ஹிட்மேன் என்று செல்லமாக ரசிகர்களால் அழைக்கப்படும் ரோஹித் சர்மா 92 பந்துகளில் 14 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 102 ரன்களை எடுத்த போது சாதனையை நிகழ்த்தினார்.

இவருடன் கே.எல்.ராகுல் 87 பந்துகளில் 8 பவுண்டரிகல் 1 சிக்சருடன் 81 ரன்கள் எடுத்து  ஆடிவருகிறார். இந்திய அணி 189 ரன்களுக்கு விக்கெட் இழக்காமல் ஆடி வருகிறது.

இன்னிங்சின் 29வது ஓவரை ரஜிதா வீச ஷார்ட் பிட்ச் பந்தை அவரது பேவரைட் ஷாட் ஆன புல் ஷாட்டில் ஸ்கொயர் லெக் பவுண்டரிக்கு விரட்டி சதம் கண்டார், இந்த ஷாட்டை அவரால் மறக்க முடியாது, காரணம் உலக சாதனை ஷாட்டாக அது அமைந்தது.

அதே போல் இந்திய அணி செய்த இன்னொரு உலகக்கோப்பை சாதனையிலும் ரோஹித் சர்மா உள்ளார், அதாவது ஒரே உலகக்கோப்பைத் தொடரில் முதல் விக்கெட்டுக்காக 4 சதக்கூட்டணி அமைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

அதே போல் ஒருநாள் போட்டிகளில் 3 சதங்களை அடுத்தடுத்து எடுத்ததிலும் ரோஹித் சர்மா பெரிய வீரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார். மேலும் இந்த உலகக்கோப்பையில் அதிக ரன்கள் வீரர்கள் பட்டியலில் ஷாகிப் அல் ஹசனைக் கடந்தார்.

ரஜிதா பந்தில் 103 ரன்கள் எடுத்து ரோஹித் சர்மா மேத்யூஸிடம் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார்.

SCROLL FOR NEXT