31-வது ஒலிம்பிக் திருவிழா பிரே சிலின் ரியோ டி ஜெனிரோவில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நேற்று அதிகாலை கோலாகல மாக தொடங்கியது. வழக்கமான ஒலிம்பிக்கின் கருப்பொருளான அமைதி இம்முறை உலக வெப் பமயமாதலை குறித்த விழிப்பு ணர்வாக மாறியிருந்தது.
நேற்று தொடங்கிய ஒலிம்பிக் திருவிழா மொத்தம் 17 நாட்கள் நடைபெறுகிறது. இதில் இந்தியா, அமெரிக்கா, சீனா உட்பட 206 நாடுகளைச் சேர்ந்த 11,239 வீரர் வீராங்கனைகள் கலந்துகொண் டுள்ளனர். உலக வரலாற்றில் முதல் முறையாக அகதிகள் ஓர் அணியாக இணைந்து ஒலிம் பிக் கில் கலந்து கொள்கின்றனர். இந்தியாவில் இருந்து 118 பேர் கலந்து கொள்கின்றனர். இந்திய வரலாற்றில் ஒலிம்பிக்கில் அதிக அளவிலான வீரர்கள் பங்கேற்பது இதுவே முதல்முறை.
நாட்டின் பொருளாதார சரிவு, விலையேற்றம், ஜிகா வைரஸ் உள்ளிட்ட அச்சுறுத்தல்களுக்கு நடுவே ரியோ ஒலிம்பிக் தொடக்க விழா நிகழ்ச்சிகள், ரியோ டி ஜெனிரோவின் வரலாற்று சிறப்பு வாய்ந்த மரக்கானா மைதானத்தில் தொடங்கின. பிரேசிலின் திரைப்பட இயக்குனர் பெர்னாண்டோ மெய்ர்லஸ், தயாரிப்பாளர் டேனியலா தாமஸ் தலைமையில் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.
முதலில் பிரேசிலின் தேசிய கீதம் இசைக்கப்பட்டு, தேசிய கொடி மைதானத்தில் ஏற்றப்பட் டது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரேசிலின் நடிகை மற்றும் மாடல் அழகி ஜிஸ்லே கரோலின் பண்ட்சென், 'கேட் வாக்' வந்தார். இதைத்தொடர்ந்து சுமார் 5 ஆயிரம் நடனக் கலைஞர்கள் கலந்துகொண்ட கலை நிகழ்ச்சிகள் பிரம்மாண்டமாக அமைந்தன. இவை பிரேசில் நாட்டின் பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் இருந்தன.
‘‘பூமிக்கு தீங்குசெய்யும் நடவடிக் கைகளை தடுத்து நிறுத்தினால் மட்டும் போதாது, இயற்கையை குணப்படுத்த இதுவே சரியான நேரம். மரங்களை நடுவோம். மானுடத்தையும், இயற்கையையும் காப்பாற்றுவோம். இதுதான் ஒலிம் பிக் செய்தி’’ என்று கூறப்பட்டது.
ஒலிம்பிக்கின் பாரம்பரிய கருப் பொருளான அமைதி, இம்முறை மரங்கள் குறித்த விழிப்புணர்வாக மாறியிருந்தது. தொடக்க விழாவில், பிரேசில் விழா ஏற்பாட்டா ளர்கள் தங்களின் உணர்வுப்பூர்வ விளையாட்டான கால்பந்தை ஒதுக்கி, பருவநிலை மாற்றத் தையும் இயற்கை வளங்களின் சிதைவையும் விழாவின் மையக் கருவாக மாற்றியிருந்தனர். பிரேசிலின் பாரம்பரிய சம்பா நடனம் விழாவில் கோலாகலத்துடன் அரங்கேறியது.
விழா 22 பகுதிகளாகப் பிரிக் கப்பட்டது. முதல் 11 பகுதிகளில் பிரேசிலைப் பற்றியும், அதன் பரிணாம வளர்ச்சி பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது. முதல் 45 நிமிடங்கள் பிரேசில் வரலாறும், பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் அதன் நிலை பற்றியும் கூறப்பட் டது. வடகிழக்கு பிரேசிலின் அமேசான் மழைக்காடுகளைப் பற்றியும் தகவல்கள் பரிமாறப் பட்டன. பின்னர் சமகாலத்திய பிரேசிலின் கட்டமைப்பும், அதன் நகரமயமாக்கலும் கூறப்பட்டன.
அடுத்ததாக வீரர்கள் அணிவ குப்பு தொடங்கியது. ஒலிம்பிக்கின் பிறப்பிடம் கிரேக்கம் என்பதால் அந்நாட்டினர் முதல்வரிசையில் கொடியேந்திச் சென்றனர். அதைத் தொடர்ந்து மற்ற நாட்டினர் அணி வகுக்க கடைசியாக போட்டியை நடத்தும் பிரேசில் வீரர், வீராங் கனைகள் அணிவகுத்துச் சென் றனர். இந்திய அணி 95-வது நாடாக அணிவகுப்பில் பங்கேற் றது. துப்பாக்கிச்சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா தேசியக் கொ டியை மிடுக்காக ஏந்திச் சென்றார்.
இந்திய வீரர்கள் அணிவகுப்பில் 70 வீரர்களும், 24 அதிகாரிகளும் இடம் பெற்றனர். வீரர்கள் கடல் நீல வண்ண கால்சட்டை யும், மேல்சட்டையும் அணிந்தி ருந்தனர். வீராங்கனைகள் பாரம் பரிய புடவையையும், நீல நிற மேல்சட்டையும் அணிந்திருந்தனர். தனது 7-வது ஒலிம்பிக்கில் கலந் துகொள்ளும் லியாண்டர் பயஸ், மக்கள் கூட்டத்தில் உற்சாகத்து டன் காணப்பட்டார். பாட்மிண்டன் வீராங்கனைகள் ஜூவாலா கட்டா, அஸ்வினி பொன்னப்பா மற்றும் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை திபா கர்மாகரும் அணி வகுப்பில் கலந்துகொண்டனர். இந்திய ஆடவர் ஹாக்கி அணி மற்றும் வில்வித்தை, டேபிள் டென்னிஸ், பளு தூக்குதல் அணிகளும் தொடக்க விழாவில் கலந்துகொள்ளவில்லை.
ஸ்பெயின், இங்கிலாந்து நாடுகளின் அணிவகுப்பு பிரபல வீரர்களான ரபேல் நடால் மற்றும் ஆண்டி முர்ரேவின் தலைமையில் களைகட்டியது. 60 உறுப்பினர்க ளைக்கொண்ட ஜமைக்கா குழு உலக சாம்பியனான உசேன் போல்ட் இல்லாமலேயே நடந்து சென்றது. நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் தலைமையில் 500 உறு ப்பினர்களோடு அமெரிக்க அணி அணிவகுத்துச் சென்றது.
‘‘ஒலிம்பிக் அமைதியை வளர்க்கிறது. நாம் நிலையில்லாத, அவ நம்பிக்கை கொண்ட, நெருக்கடியான உலகத்தில் வாழ்கிறோம். உலகின் தலைசிறந்த 11,000 வீரர்கள் ஒருசேர ஒலிம்பிக் கிராமத்தில் தங்கி, தங்களின் உணவையும், உணர்வையும் பகிர்ந்து வாழ்கின் றனர். இந்த ஒலிம்பிக் உலகில், எல்லோருக்கும் ஒரே விதிதான். அது எல்லோரும் சமம் என்பதே.
வீரர்களின் அணிவகுப்புக்குப் பிறகு சர்வதேச ஒலிபிக் கவுன்சில் தலைவர் தாமஸ் பாச் நீண்ட உரையாற்றினார். அதில், புதிதாக இணைந்துள்ள அகதிகள் ஒலிம் பிக் அணியை முழுமனதோடு வரவேற்கிறேன். நீங்கள்தான் இந்த ஒலிம்பிக்கின் அடையாளம் , உலகம் முழுக்க பரவியுள்ள லட்சக்கணக்கான நாடிழந்தவர் களுக்கு உங்களால் பெருமை. அவர்களிடத்தில் நீங்கள் புதிய நம்பிக்கையை விதைத்துள்ளீர்கள். போர், வன்முறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தாய் நாட்டை விட்டு நீங்கள் பிரிந்து சென்றாலும், ஊக்கம் நிறைந்த உங்களை போன்றவர்களால்தான் மனித குலத்துக்கே பெருமை’’ என்று குறிப்பிட்டார்.
இதையடுத்து பிரேசிலின் தற்காலிக அதிபர் மைக்கேல் டெமெர், 31-வது ஒலிம்பிக் போட்டி தொடங்குவதாக முறைப்படி அறி வித்தார். பின் வீரர்கள், நடுவர்கள் சார்பில் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டன. இதன் பின்னர் பார்வையாளர்களின் பலத்த கர வொலிக்கிடையில், முன்னாள் நம்பர்-1 டென்னிஸ் வீரரும், மூன்று முறை பிரெஞ்ச் ஓபன் பட்டம் பெற்ற பிரேசில் வீரருமான கஸ்டாவோ குயர்டன் ஒலிம்பிக் ஜோதியை ஏந்திவந்தார். 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்ஸில் மாரத் தான் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்ற பிரேசில் வீரரான வெண்டர்லி டி லிமா, ஒலிம்பிக் தீபத்தை பெரிய கோப்பரையில் ஏற்றினார்.
பின் இந்த கொப்பரை அப்ப டியே உயரத்தில் வைக்கப்பட்டு அதன் அருகே சுழலும் விளக்கு போன்ற அமைப்பு கொண்டு செல்லப்பட்டது. இதனால் அதில் இருந்த நூற்றுக்கணக்கான சிறு சிறு கண்ணாடிகளில் பட்டு சூரிய ஒளி போல பிரதிபலித்தது. 'சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் சக்தியை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்' என்ற தத்துவத்தை விளக்குவதாக தீபம் ஏற்றும் நிகழ்ச்சி அமைந்திருந்தது. ஒலிம்பிக் தீபத்தை கால்பந்து ஜாம் பவான் பீலே தான் ஏற்றுவதாக இருந்தது. ஆனால் உடல் நலன் பாதிக்கப்பட்டதால் கடைசி நேரத் தில் அவர் கலந்துகொள்ள முடியாமல் போனது.
இறுதியாக ஏராளமான வாண வேடிக்கைகள் விண்ணை நோக்கிப் பாய, மரக்கானா மைதானம் ஒளி வெள்ளத்தில் மிதந்தது. ஐ.நா. பொதுச்செயலாளர் பான்கி மூன் உள்ளிட்ட 78 ஆயிரம் ரசிகர்கள் தொடக்க விழாவை நேரில் கண்டு ரசித்தனர். தொடக்க நிகழ்ச்சிகள் வண்ணமயமாக 4 மணி நேரம் நடைபெற்று நிறைவடைந்தது.