2012 லண்டன் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இந்திய வீரர் யோகேஷ்வர் தத்தின் வெண்கலப் பதக்கம் வெள்ளியாக உயர்த்தப்படுவதையடுத்து, தனக்கு அதில் பெரிய நாட்டமில்லை என்று யோகேஷ்வர் தத் தெரிவித்துள்ளார்.
உண்மையில் வெள்ளிப்பதக்கம் வென்ற ரஷ்ய வீரர் பெசிக் குடுகோவ் மரணமடைந்த பிறகு அவரது ஊக்கமருந்து சோதனை முடிவுகள் வெளிவந்து பதக்கம் பறிக்கப்படுவது வேதனை அளிக்கிறது என்று கூறிய யோகேஷ்வர் தத் தனது ட்வீட்டில், “பெசிக் குடுகோவ் ஒரு அருமையான மல்யுத்த வீரர், அவர் உயிரிழந்த பிறகு ஊக்கமருந்து சோதனை முடிவுகள் வெளியாகி பதக்கம் பறிக்கப்படுவது எனக்கு வேதனை அளிக்கிறது. ஒரு மல்யுத்த வீரனாக நான் அவர் மீது மரியாதை வைத்துள்ளேன்.
சாத்தியமானால் வெள்ளிப்பதக்கத்தை அவரது குடும்பம் வைத்திருக்க அனுமதிக்கப் படவேண்டும். அது அவரது குடும்ப மரியாதையை தக்கவைக்கும். எனக்கு மனிதார்த்த மதிப்பீடுகளே அனைத்தையும் விட முக்கியமானது” என்று தெரிவித்துள்ளார்.