ஜாகீர் கான் இந்திய அணியின் பந்து வீச்சுப் பயிற்சியாளராக வேண்டும் என்று ஆஃப் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங் விருப்பம் தெரிவித்துள்ளார்.
தலைமைப் பயிற்சியாளராக அனில் கும்ப்ளேயும், பேட்டிங் பயிற்சியாளராக சஞ்சய் பாங்கரும் இருக்கும் இந்திய அணியில் பவுலிங் பயிற்சியாளர் இடம் காலியாகவே உள்ளது.
இது குறித்து ஹர்பஜன் ட்விட்டரில் கூறும்போது, “என்னைப் பொறுத்தவரை இந்திய வேகப்பந்து பயிற்சியாளராக ஜாகீர் கானை நியமிக்க வேண்டும். ஜாகீர் கான் கிரேட் மைண்ட்” என்று பதிவிட்டுள்ளார்.
முன்பொருமுறை ஜாகீர் கானிடம் இது பற்றி கேட்ட போது, “எனக்கு விருப்பம்தான். நான் ஏற்கெனவே அத்தகைய பணியை மேற்கொண்டிருக்கிறேன். ஆகவே எனக்கு விருப்பம் உள்ளது” என்று கூறியிருந்தார்.
ஜாகீர் கான் 92 டெஸ்ட் போட்டிகளிலும் 200 ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் ஆடியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 311 விக்கெட்டுகளையும் ஒருநாள் போட்டிகளில் 282 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
ஏற்கெனவே தோனி தலைமையில் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் ஆடும் போது ஜாகீர் கான் அறிவிக்கப்படாத பவுலிங் கேப்டனாகவே செயல்பட்டதாகக் கூறப்படுவதுண்டு.
இந்நிலையில் ஹர்பஜன் சிங் இவ்வாறு கூறியுள்ளார்.