பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை கார்பைன் முகுருசா சாம்பியன் பட்டம் வென்றார்.
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகள் பாரிஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் மகளிருக்கான பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் கார்பைன் முகுருசாவும், முதல் இடத்தில் இருக்கும் அமெரிக்க வீராங்கனை செரினா வில்லியம்சும் மோதினர். கடந்த சில ஆண்டுகளாக மிகச் சிறப்பாக ஆடிவரும் செரினா வில்லியம்ஸ், இப்போட்டியில் வெற்றி பெறுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு இருந்தது. ஆனால் இதற்கு நேர் மாறாக நேற்று ஆட்டத்தின் ஆரம்பம் முதலே முகுருசா அனல் கக்கினார்.
முதல் செட்டை 7-5 என்ற புள்ளிக்கணக்கில் வென்ற முகுருசா அடுத்த செட்டை 6-4 என்ற புள்ளிக்கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இது முகுருசா வெல்லும் முதலாவது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும். 1998-ம் ஆண்டு அரண்டா சாஞ்சஸ் விகாரியோ வென்ற பிறகு பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பட்டம் வெல்லும் முதலாவது ஸ்பெயின் வீராங்கனை இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றியைக் குறித்து நிருபர்களிடம் பேசிய முகுருசா, “மிகச்சிறந்த வீராங்கனை ஒருவரை வீழ்த்து முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றது மகிழ்ச்சியாக உள்ளது. இன்றைய போட்டியில் செரினா வில்லியம்ஸ் சிறப்பாக ஆடினார். அவரை வீழ்த்துவது கடினமாக இருந்தது” என்றார்.