விளையாட்டு

உலகக் கோப்பை கபடி: ஸ்பெயினை எளிதில் வீழ்த்தியது இந்தியா

செய்திப்பிரிவு

பஞ்சாபில் நடந்து வரும், 2013ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை கபடிப் போட்டியில், இந்திய ஆடவர் அணி ஸ்பெயின் அணியை வீழ்த்தி தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்திய மகளிர் அணி கென்யாவை வீழ்த்தியது.

லஜ்வந்தி மைதானத்தில் நடந்த போட்டியில், இந்திய ஆடவர் அணி, ஸ்பெயின் அணியை 55-27 என்ற புள்ளிகள் கணக்கில் வெல்ல, மகளிர் அணி, கென்யாவை 56-21 என்ற கணக்கில் வென்று தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. டிசம்பர் 5ஆம் தேதி நடக்கவிருக்கும் அடுத்த ஆட்டத்தில், இந்திய ஆடவர் அணி கென்யா ஆடவர் அணியை சந்திக்கவுள்ளது. 7ஆம் தேதி, மகளிர் அணி, அமெரிக்க அணியுடன் மோதுகிறது.

இந்த முறை, உலகக் கோப்பையில், ஆடவர் பிரிவில் 12 அணிகளும், மகளிர் பிரிவில் 8 அணிகளும் போட்டியிடுகின்றன. முன்னதாக, இந்த நான்காவது உலகக் கோப்பை போட்டி, பஞ்சாப் மாநிலத்தின் கல்வித்துறை அமைச்சர் சிகந்தர் சிங் மலுகாவால் துவக்கிவைக்கப்பட்டது. ஹோஷியாபூரில் அமைந்துள்ள வெளிப்புற அரங்கில் நடந்த விழாவில் பேசிய மலூகா, பஞ்சாப் அரசின் முயற்சியால் கபடிக்கு சர்வதேச அந்தஸ்து கிடைத்துள்ளதாகவும், பஞ்சாப் அரசு, விளையாட்டுக்கு முக்கியத்துவம் தருவதால், அந்தத் துறைக்கான பட்ஜெட்டை 12 கோடியிலிருந்து, 142 கோடிக்கு உயர்த்தியுள்ளதாகவும் குறிப்பிட்டு பேசினார்.

SCROLL FOR NEXT