புயர்டோ ரிகோ அணிக்கு எதிரான நட்புரீதியிலான கால்பந்து போட்டியில் விளையாடும் இந்திய அணிக்கு 24 வயதான கோல்கீப்பர் குர்பீரித் சிங் சாந்து கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இரு அணிகளுக்கு இடையேயான நட்புரீதியிலான ஆட்டம் இன்று இரவு 8 மணிக்கு மும்பையில் நடைபெறுகிறது. இந்த ஆண்டில் இந்திய கால்பந்து அணி கலந்துகொள்ளும் 5-வது சர்வதேச போட்டி இதுவாகும். 61 வருடங்களுக்கு பிறகு மும்பையில் தற்போதுதான் முதன்முறையாக சர்வதேச கால்பந்து போட்டி நடைபெறுகிறது.
மேலும் வட, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகள் கூட்டமைப்பை சேர்ந்த நாடு ஒன்று அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் விளையாடுவதும் இதுவே முதன்முறை.
புயர்டோ ரிகோ அணி பிபா கால்பந்து தரவரிசையில் 114-வது இடத்தில் உள்ளது. அதேவேளையில் இந்தியா 152-வது இடம் வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.