விளையாட்டு

பிசிசிஐ சீர்திருத்தங்களுக்கான லோதா கமிட்டி பரிந்துரைகள் சட்டவிரோதமானவை: மார்கண்டேய கட்ஜு விமர்சனம்

பிடிஐ

பிசிசிஐ சீர்திருத்தங்கள் பற்றிய உச்ச நீதிமன்ற உத்தரவு தற்போது முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜுவினால் கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.

லோதா பரிந்துரைகள் சட்டத்திற்குப் புறம்பானவை என்றும் அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானவை என்றும் கட்ஜு கூறியுள்ளார்.

நீதிபதி லோதா கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்தும் நோக்கத்தில் அறிவுரையாளராக பிசிசிஐ கட்ஜுவை நியமித்தது. இதனையடுத்து உச்ச நீதிமன்றத்தி இன்னும் விரிவான அமர்வுக்கு மறு ஆய்வு மனு செய்ய பிசிசிஐ-க்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

“உச்ச நீதிமன்ற உத்தரவு அரசமைப்புச் சட்டத்துக்குப் புறம்பானது, சட்ட விரோதமானது. அரசியல் சாசனக் கொள்கைகளை மீறுவதாக அந்த உத்தரவு உள்ளது. நம் அரசியல் சாசனப்படி நம்மிடம் சட்டமியற்றுவோர், செயல்படுத்துவோர் மற்றும் நீதித்துறை ஆகியவை உள்ளன. இதில் அந்தந்த செயல்பாடுகள் குறித்து கடுமையான வரையறைகள் உள்ளன, வேறுபாடுகள் உள்ளன. சட்டமியற்றுவோர்கள்தான் இதற்கான சட்டங்களை இயற்ற வேண்டும். நீதித்துறையே சட்டங்களை இயற்றத் தொடங்கினால் இது ஒரு அபாயகரமான முன்மாதிரியாகிவிடும்.

எனவேதான் நான் உத்தரவை இன்னும் விரிவான உச்ச நீதிமன்ற அமர்வுக்கு மறு ஆய்வு செய்யுமாறு மனு செய்ய அறிவுறுத்தியுள்ளேன். இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றம் லோதா கமிட்டியிடம் அவுட் சோர்ஸ் செய்து பிசிசிஐ-க்கான தண்டனையை முடிவு செய்துள்ளது.

பிசிசிஐ செயல்பாடுகளில் உள்ள குறைபாடுகளை கண்டுபிடிக்கவே உச்ச நீதிமன்ரம் லோதா கமிட்டியை நியமித்தது. அதுவரை சரியே. லோதா கமிட்டி தனது அறிக்கையை தாக்கல் செய்தபிறகு அதனை நாடாளுமன்றத்துக்குத்தான் அனுப்ப வேண்டும். அமைச்சரவையே இதனை ஏற்பதா வேண்டாமா என்பதை தீர்மானிக்க வேண்டும். நீதித்துறை சட்டமியற்ற முடியாது .

உச்ச நீதிமன்றமும், லோதா கமிட்டியும் “தமிழ்நாடு அமைப்புகள் பதிவாளர் சட்டத்தை” மீறியுள்ளனர். அரசியல் சாசன சட்டத்தை மாற்ற வேண்டுமெனில் 2/3 பெரும்பான்மையுடன் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். அமைப்பே சட்டத்திருத்தம் செய்யமுடியாது. நிதி முறைகேடுகள், நிர்வாகச் சீர்குலைவுகள் இருக்கலாம் ஆனால் அமைப்புகளின் பதிவாளருக்குத்தான் இது பற்றி எழுத வேண்டும்.

பிசிசிஐ-க்கு சீர்திருத்தம் தேவை என்பதை ஒப்புக் கொண்டால், நீதித்துறைக்கும் சீர்திருத்தங்கள் தேவைப்படுகிறது. இந்திய நீதிமன்றங்களில் 3 கோடிக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இப்போது இந்த அபாய போக்கு தொடங்கினால் நாளை உச்ச நீதிமன்றம் செய்தி ஊடகங்களின் எடிட்டோரியல் கொள்கைகளையும் தீர்மானிக்கத் தொடங்கலாம், பத்திரிகையாளர்களின் பணிக்காலத்தையும் தீர்மானிக்கலாம் இது அபாயகரமானது.”

இவ்வாறு சாடியுள்ளார் கட்ஜு.

SCROLL FOR NEXT