விளையாட்டு

ரஞ்சி கிரிக்கெட்: வெற்றிப் பாதையில் கர்நாடகம்

செய்திப்பிரிவு

ரஞ்சி கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் மகாராஷ்டிரத்துக்கு எதிராக கர்நாடகம் தனது முதல் இன்னிங்ஸில் 158 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 474 ரன்கள் குவித்துள்ளது.

தற்போதைய நிலையில் முதல் இன்னிங்ஸில் 169 ரன்கள் முன்னிலை பெற்றிருப்பதன் மூலம் ரஞ்சி கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பை நெருங்கியுள்ளது கர்நாடகம்.

ஹைதராபாதில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த மகாராஷ்டிரம் தனது முதல் இன்னிங்ஸில் 104.1 ஓவர்களில் 305 ரன்களுக்கு சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய கர்நாடகம் 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 68 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 230 ரன்கள் எடுத்திருந்தது.

3-வது நாளான வெள்ளிக்கிழமை தொடர்ந்து ஆடிய கர்நாடக அணியில் கணேஷ் சதீஷ் முந்தைய நாள் எடுத்திருந்த 117 ரன்களுடன் ஆட்டமிழந்தார். ராகுல் 131 ரன்கள் குவித்து ஆட்டமிழக்க, உத்தப்பா 72 ரன்களும், பாண்டே 36 ரன்களும், கௌதம் 7 ரன்களும் எடுத்தனர்.

பின்னர் வந்த நாயர் 44, அமித் வர்மா 29 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். ஆட்டநேர முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 474 ரன்கள் குவித்துள்ளது கர்நாடகம். எஸ்.கோபால் 9, வினய் குமார் 8 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இன்னும் இரு நாள் ஆட்டம் மட்டுமே மீதமுள்ள நிலையில் கர்நாடகத்தின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

SCROLL FOR NEXT