பாகிஸ்தான் வீரர் ஃபகர் ஜமானும், தினேஷ் கார்த்திக்கின் களத்தில் அவர்களது செயல் சரியானது அல்ல என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் விமர்சனம் தெரிவித்துள்ளார்.
ஆசியக் கோப்பையில் ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் புதன்கிழமை நடந்தது. இந்த ஆட்டத்தில் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் தனது ஜெர்சியில் தனது முழு பெயருடன் விளையாடாமல் டிகே என்று அணிந்திருந்த ஜெர்சியை அணிந்துக் கொண்டு விளையாடினார்.
பின்னர் பாகிஸ்தான் வீரர் ஃபகர் ஜமான் 18வது ஓவரில் பந்துவீசும் போது தனது தொப்பியை பின்புறமாக அணிந்துக் கொண்டு விளையாடினார்.
தற்போது இந்த இரண்டு வீரர்களின் செயல்களையும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, "பாகிஸ்தான் கேப்டனோ அல்லது வேறு யாராவதோ ஃபகர் அவர் தொப்பியை சரியாக அணிய வேண்டும் என்று ஜமானிடம் கூறி இருக்கலாம். நீங்கள் தொப்பியை பின்புறமாக அணிந்துக் கொண்டு பாகிஸ்தான் பிரீமியர் லீகில் விளையாடலாம். ஆனால் இது நீங்கள் உங்கள் தேசிய அணிக்காக விளையாடும் விளையாட்டு.
மேலும், தினேஷ் கார்த்திக்கின் செல்ல பெயர் டிகேவாக இருக்கலாம். ஆனால் அவர் களத்தில் அவருடைய பெயர் மற்றும் ஜெர்சி நம்பர் இடம்பெற்றுள்ள ஆடையை அணிந்து விளையாட வேண்டும். அப்போதுதான் மக்கள் உங்களை அடையாளம் காணுவார்கள்” என்றார்.