சென்னையில் நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் போட்டியில் சிஎஸ்கே பேட் செய்து வருகிறது. பெயர் சென்னை சூப்பர் கிங்ஸ் என்றாலும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ‘சென்னை அணி’யை ‘நம் அணி’ என்று செல்லமாக அழைத்து வருகின்றனர்.
ஆனால் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு வீரர் கூட சென்னை அணியில் இல்லை. மாறாக கிங்ஸ் லெவன் அணியில் இரண்டு தமிழ்நாட்டு வீரர்கள் உள்ளனர், கேப்டன் அஸ்வின் மற்றும் லெக் ஸ்பின்னர் முருகன் அஸ்வின்.
தமிழ்நாட்டு வீரர்கள் இரண்டு அஸ்வின்களுக்கும் இது சொந்த மைதானம், குறிப்பாக அணித்தலைவர் அஸ்வின் கிரிக்கெட் வாழ்க்கையில் பிரதான அங்கம் வகிக்கும் சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் நமக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்ப்பதில் நியாயம் உள்ளது.
இந்நிலையில் டாஸ் போட்டு விட்டு அஸ்வின் தன் ஆசையை வெளிப்படுத்தினார்:
நாங்களும் டாஸ் வென்றிருந்தால் முதலில் பேட்டிங்தான் செய்திருப்போம். பிட்ச் இப்போது பார்க்கும் போது ‘ஹார்டு’ ஆக உள்ளது, 40 ஓவர்களுக்கும் இப்படியே இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். சேப்பாக்கத்தில் ஆடுவது உணர்ச்சிகரமானது.
இம்மாதிரிப்போட்டிகளில் சென்னை ரசிகர்கள் எங்கள் அணிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று விரும்புகிறேன், ஆனால் அது நடக்கப்போவதில்லை என்றே கருதுகிறேன்.
இவ்வாறு கூறினார் அஸ்வின்.