ஒருநாள் தொடரில் சச்சின், சேவாக் கூட்டணி நிகழ்த்திய சாதனையை ரோஹித் சர்மா, ஷிகர் தவண் கூட்டணி முயறிடித்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளனர்.
மொஹாலியில் நடந்துவரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியின் போது இந்த சாதனையை ரோஹித், தவண் கூட்டணி நிகழ்த்தியது.
இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர், கங்குலி தொடக்க கூட்டணி வெற்றிக்கூட்டணியாகவும், அதிகமான ரன் சேர்த்த தொடக்க ஜோடியாகும் இன்றுவரை இருந்து வருகி்ன்றனர். உலக அளவில் சிறந்த தொடக்க ஜோடி என்று சச்சின், கங்குலி புகழப்பட்டனர்.
இவர்கள் இருவரும் சேர்ந்து ஒருநாள் போட்டிகளில் 8 ஆயிரத்து 227 ரன்கள் குவித்து இன்னும் முதலிடத்தில் இருந்து வருகின்றனர்.
சச்சின், கங்குலி ஜோடிக்கு அடுத்தார்போல், சச்சின், சேவாக் ஜோடி இருந்தனர். இருவரும் களத்தில் இறங்கி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினால் எதிரணியினர் மிரள்வார்கள். அதிலும் சேவாக் அதிரடி ஆட்டம் எதிரணியின் நம்பிக்கையை உடைத்துவிடும் அளவுக்கும். சச்சின், சேவாக் கூட்டணி ஒருநாள் போட்டிகளில் 4 ஆயிரத்து 387 ரன்கள் சேர்த்து 2-வது இடத்தில் இருந்து வந்தனர்.
இந்நிலையில், மொஹாலியில் நடந்துவரும் 4-வது ஒருநாள் ஆட்டத்தில் ஷிகர் தவண், ரோஹித் சர்மா கூட்டணி, அதிக ரன்கள் சேர்த்து சேவாக், சச்சின் சாதனையை முறியடித்துவிட்டனர். ஷிகர் தவண், ரோஹித் சர்மா ஜோடி ஒருநாள் போட்டிகளில் 4 ஆயிரத்து 389 ரன்கள் சேர்த்து சச்சின், சேவாக் ஜோடியை பின்னுக்கு தள்ளினார்கள்.
இதன் மூலம் இந்திய அணியில் தொடக்க ஜோடியில் அதிக ரன்கள் குவித்தவர்களில் சச்சின், கங்குலிக்கு அடுத்த இடத்தில் தற்போது, ஷிகர் தவண், ரோஹித் சர்மா ஜோடி பிடித்துவிட்டனர்.
4-வது இடத்தில் ராகுல் டிராவிட், கங்குலி ஜோடி 4 ஆயிரத்து 332 ரன்கள் சேர்த்துள்ளனர், 5-வது இடத்தில் ரோஹித் சர்மா, விராட் கோலி ஜோடி 4 ஆயிரத்து 328 ரன்களுடன் உள்ளனர்.