விளையாட்டு

15 சிக்ஸ்... ஒரே ஓவரில் 35 ரன்கள்...55 பந்துகளில் 147 ரன்கள்: வெளுத்து வாங்கிய ஷ்ரேயஸ் அய்யரின் புதிய டி20 சாதனை

இரா.முத்துக்குமார்

இந்தூரில் நடைபெறும் சையத் முஷ்டாக் அலி ட்ராபி உள்நாட்டு டி20 தொடரில் சிக்கிம் அணியின் பந்து வீச்சை மும்பையின் ஷ்ரேயஸ் அய்யர் புரட்டி எடுத்தார்.

மும்பை அணி 7வது அதிகபட்ச டி20 ஸ்கோரான 258 ரன்களை 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து எடுத்துள்ளது.  டாஸ் வென்ற மும்பை கேப்டன் அஜிங்கிய ரஹானே முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார்.

ரஹானே 9 ரன்களிலும் மற்றொரு தொடக்க வீரர் பிரித்வி ஷா 1 பவுண்டரி 1 சிக்சருடன் 4 பந்துகளில் 10 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். அடுத்ததாக ஜோடி சேர்ந்த ஷ்ரேயஸ் அய்யர், சூரிய குமார் யாதவ் ஜோடி 213 ரன்களை 14 ஓவர்களில் அதிரடியாகச் சேர்த்தனர். சூரியகுமார் யாதவ் 33 பந்துகளில் 8 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 63 ரன்கள் எடுக்க, ஷ்ரேயஸ் அய்யர் 55 பந்துகளில் 7 பவுண்டரிகள் 15 சிக்சர்களுடன் 55 பந்துகளில் 147 ரன்கள் புரட்டி எடுத்தார்.

இதன் மூலம் ரிஷப் பந்த்தின் அதிகபட்ச டி20 ஸ்கோரான 128 நாட் அவுட்டை முறியடித்து சாதனை புரிந்தார் ஷ்ரேயஸ் அய்யர். இப்போது அய்யர்தான் அதிகபட்ச டி20 ஸ்கோர் எடுத்த இந்திய வீரர் ஆவார்.

இந்த இன்னிங்சில் சிக்கிம் மிதவேகப்பந்து வீச்சாளர் டாஷி பல்லா என்பவரின் ஒரே ஓவரில் 35 ரன்களை விளாசி எடுத்தார் ஷ்ரேயாஸ்.

அதேபோல் இதுவரை முரளி விஜய் அடித்த 11 சிக்சர்கள்தான் அதிக சிக்சர்களுக்கான சாதனையாக இருந்து வந்தது. தற்போது அந்தச் சாதனையையும் முறியடித்த ஷ்ரேயஸ் அய்யர் 15 சிக்சர்கள் என்று முதலிடம் வகிக்கிறார்.

தொடர்ந்து ஆடிவரும் சிக்கிம் அணி 11 ஒவர்களில் 48/3 என்று தோல்விப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

SCROLL FOR NEXT