நேப்பியர் ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணியின் மீதான எதிர்பார்ப்புகளை முறியடிக்கும் விதமாக நல்ல பவுலிங், மோசமான ஷாட் தேர்வு, உத்தி ஆகியவற்றின் கலப்பில் நியூஸிலாந்து 157 ரன்களுக்கு மடிந்து 8 விக்கெட்டுகளில் இந்தியாவிடம் படுதோல்வி அடைந்தது.
சமீபமாக 300 ரன்களுக்கும் மேல் ஸ்கோர் செய்து பழக்கப்பட்டதால் அந்த அணி இறங்கும்போதே 350 என்று நினைத்து விடுவதாக கேப்டன் கேன் வில்லியம்சன் தன் பேட்டியின் போது தெரிவித்துள்ளார்.
“இது எங்களது நல்ல ஆட்டம் அல்ல. நாங்கள் இந்திய அணி நன்றாக ஆடும் என்று எதிர்பார்த்தோம், ஆனால் மிக நன்றாக ஆடிவிட்டனர். இங்கு மரபான பிட்ச் அல்ல இது. இது ஹார்டான பிட்ச் அல்ல. வேகம் குறைந்த பந்துகளை பார்த்து ஆடியிருக்க வேண்டும். ஆனாலும் இந்திய பவுலர்களின் லெந்த் அபாரமானது.
250 ரன்கள் எடுத்திருந்தால் சவாலாக இருக்கும் பிட்சில் 150+ எப்படி போதும்? பிட்சுக்குத் தகுந்தவாறு அட்ஜஸ்ட் செய்யவில்லை. சிலவேளைகளில் இங்கு வரும்போது ‘ஆம் இது 350+ பிட்ச்’ என்று நினைக்கிறோம் இதுதான் பிரச்சினையின் ஆரம்பம்.
இந்தப் பிட்சில் கொஞ்சம் சாதுரியம் தேவை. அனைத்து இந்திய பவுலர்களும் பங்களிப்பு செய்தனர், ஆனால் இன்னும் கொஞ்சம் சிந்தித்து நாங்கள் ஆடியிருக்க வேண்டும். இந்தத் தோல்வியிலிருந்து விரைவில் நகர்ந்து செல்லுதல் நலம்” இவ்வாறு கூறினார் கேன் வில்லியம்சன்.