காஃப் வித் கரண் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள் கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு பிசிசிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பெண்கள் பற்றி இழிவாகப் பேசியதற்காக பாண்டியாவுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இதனையடுத்து அடுத்த 24 மணிநேரத்துக்குள் பாண்டியா, ராகுல் இருவரும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நியமன கிரிக்கெட் கமிட்டி தலைவர் விநோத் ராய் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
பாண்டியா தன்னுடைய கருத்துக்கு மன்னிப்பு கேட்கும் விதமாக, ‘உள்ளபடியே கூற வேண்டுமெனில் நிகழ்ச்சியில் போக்கில் நான் லயித்துப் போய் அப்படி கூறிவிட்டேன், உண்மையில் எனக்கு யாரையும் புண்படுத்த வேண்டும், நோகடிக்க வேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இல்லை” என்று கூறி மன்னிப்பு கேட்டிருந்தார்
ஆனால் ராகுல் தரப்பிலிருந்து இன்னமும் எந்த ஒரு பதிலும் வரவில்லை.
பாண்டியாவின் கருத்து குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், ‘பாண்டியாவின் கருத்து மிகவும் இழிவானது, மலிவானது’ என்று பார்க்கப்படுவதாகவும் இதனால் இனி கிரிக்கெட் அல்லாத நிகழ்ச்சிகளில் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்பதைத் தடை செய்ய பிசிசிஐ பரிசீலித்து வருவதாகவும் பிசிசிஐ-க்கு நெருங்கிய வட்டாரங்கள் பிடிஐ செய்தி ஏஜென்சியிடம் தெரிவித்துள்ளது.
ஜனவரி 12ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பாண்டியா களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.