அமராவதி: ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்திருந்தது. சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியில் ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த சுழற்பந்து வீராங்கனையான ஸ்ரீசரணியும் இடம் பெற்றிருந்தார்.
இந்நிலையில் நேற்று ஆந்திரா திரும்பிய ஸ்ரீயேசரணிக்கு விஜயவாடா விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதைத் தொடர்ந்து ஸ்ரீசரணி, முன்னாள் கேப்டன் மிதாலி ராஜுடன் இணைந்து முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்தார். இதனைத் தொடர்ந்து ஸ்ரீசரணிக்கு ரூ.2.5 கோடி பரிசுத் தொகையை வழங்குவதாக சந்திரபாபு நாயுடு அறிவித்தார். மேலும், குரூப்-1 அரசு வேலை, சொந்த ஊரான கடப்பாவில் வீடு கட்டிக்கொள்ள மனையும் வழங்குவதாக அறிவித்தார்.
மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ராதா யாதவ் ஆகியோர் நேற்று அம்மாநிலத்தின் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது அவர்களுக்கு தலா ரூ.2.25 கோடி பரிசு வழங்கப்பட்டது.