திருவாரூர்: ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய கபடி அணி வீரர் அபினேஷுக்கு வடுவூரில் நேற்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பஹ்ரைன் நாட்டில் நடைபெற்ற ஆசிய இளையோர் கபடிப் போட்டியில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் தங்கம் வென்றன. இந்திய ஆடவர் அணியில், திருவாரூர் மாவட்டம் வடுவூர் கிராமத்தைச் சேர்ந்த அபினேஷ்(17) இடம் பெற்றிருந்தார். இந்நிலையில், சொந்த ஊரான வடுவூருக்கு நேற்று வந்த அபினேஷுக்கு நேற்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திறந்த வேனில் அபினேஷை ஏற்றி வந்து, வழிநெடுகிலும் பொதுமக்கள் சால்வை, மாலைகள் அணிவித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
வரவேற்பு நிகழ்வில் அமைச்சர் டிஆர்பி.ராஜா பங்கேற்று, அபினேஷுக்கு வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து, வடுவூர் உள் விளையாட்டு அரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது. திருவாரூர் மாவட்ட அமெச்சூர் கபடிக் கழகச் செயலாளர்ராஜராஜேந்திரன், வடுவூர் ஸ்போர்ட்ஸ் அகாடமி செயலாளர் சாமிநாதன் மற்றும் பொதுமக்கள் அபினேஷுக்குப் பாராட்டுத் தெரிவித்தனர். அப்போது, தனது பயிற்சியாளர்கள் மற்றும் ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கிய தமிழக முதல்வர், துணை முதல்வருக்கு அபினேஷ் நன்றி தெரிவித்தார்.
அபினேஷின் சிறுவயதிலேயே தந்தை மோகன்தாஸ் உயிரிழந்துவிட்டார். தாயார் தனலட்சுமி மற்றும் 2 சகோதரிகள் உள்ளனர். 7-ம் வகுப்பு வரை வடுவூரில் உள்ள அரசு உதவிபெறும்பள்ளியில் பயின்ற அபினேஷ், பின்னர் தேனியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டுப் பள்ளியில் படித்தார். தற்போது வேல்ஸ் பல்கலை.யில் இளநிலை முதலாமாண்டு பட்டப் படிப்பு படித்து வருகிறார்.ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற கபடி வீரர் அபினேஷுக்கு, சொந்த ஊரான வடுவூரில் நேற்று நடைபெற்ற விழாவில் சால்வை அணிவித்து பாராட்டிய அமைச்சர் டிஆர்பி.ராஜா உள்ளிட்டோர்.