சாய் சுதர்ஷன் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 
விளையாட்டு

ஜெய்ஸ்வால், சாய் சுதர்ஷன் அபாரம்: முதல் நாளில் இந்தியா 318 ரன்கள் சேர்ப்பு

வேட்டையன்

புதுடெல்லி: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 318 ரன்கள் எடுத்துள்ளது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சாய் சுதர்ஷன் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

மேற்கு இந்தியத் தீவுகள் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) இந்த தொடரின் இரண்டாவது போட்டி தலைநகர் டெல்லியில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. கேப்டனாக ஷுப்மன் கில் வெல்லும் முதல் டாஸ் இது. இதற்கு முன்பு அவர் தலைமையில் இந்திய அணி விளையாடிய ஆறு போட்டிகளில் டாஸை இழந்துள்ளது.

இந்திய அணிக்காக ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல்.ராகுல் இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். ராகுல், 38 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சாய் சுதர்ஷன் பேட் செய்ய வந்தார். அவருடன் இணைந்த ஜெய்ஸ்வால் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் 2-வது விக்கெட்டுக்கு 193 ரன்கள் கூட்டணி அமைத்தனர். சாய் சுதர்ஷன் 165 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால், 253 பந்துகளில் 173 ரன்கள் எடுத்தார். கேப்டன் கில், 68 பந்துகளில் 20 ரன்கள் எடுத்துள்ளார். முதல் நாளில் இந்திய அணி 90 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 318 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் வசம் இன்னும் 8 விக்கெட் உள்ள நிலையில் முதல் இன்னிங்ஸில் வலுவான ரன்களை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT