காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரான ஷாமா முகமது தனது எக்ஸ் வலைதள பதிவில், “ரோஹித் சர்மா உடல் பருமனான விளையாட்டு வீரர். அவர் எடையைக் குறைக்க வேண்டும். இந்திய கேப்டன்களில் தாக்கத்தை ஏற்படுத்தாத கேப்டன் இவர்தான்” என்று கூறியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.
இதன் பின்னர் அந்த பதிவை ஷாமா நீக்கினார். இந்நிலையில் ரோஹித் சர்மாவை விமர்சித்த ஷாமாவுக்கு பிசிசிஐ-யின் செயலாளர் தேவஜித் சைக்கியா பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறும்போது, “முக்கியமான ஐசிசி போட்டிக்கு மத்தியில் இந்திய அணி இருக்கும்போது ஒரு பொறுப்பான நபர் இதுபோன்ற அற்பமான கருத்தை தெரிவிப்பது மிகவும் துரதிர்ஷ்ட வசமானது. இது ஒரு தனிநபரையோ அல்லது குழுவையோ மனச்சோர்வடையச் செய்யலாம்.
அனைத்து வீரர்களும் தங்கள் அதிகபட்ச திறனுடன் செயல்படுகிறார்கள், இதன் முடிவுகள் அனைவருக்கும் தெரியும். தேச நலனை விலையாகக் கொடுத்து தனிப்பட்ட விளம்பரத்திற்காக இதுபோன்ற அவதூறான அறிக்கைகளை வெளியிடுவதை தனிநபர்கள் தவிர்ப்பார்கள் என்று நான் நம்புகிறேன்” என்றார்.