ராவல்பிண்டி: நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் குரூப் சுற்றுப் போட்டியில் வங்கதேச அணியை 5 விக்கெட்டுகளில் வென்றது நியூஸிலாந்து. இதன் மூலம் இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் அரை இறுதிக்கு முன்னேறி உள்ளன. பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் தொடரில் இருந்து வெளியேறி உள்ளன.
கடந்த 19-ம் தேதி ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், நியூஸிலாந்து மற்றும் வங்கதேச அணிகள் குரூப் - ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளன. இதில் இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் குரூப் சுற்றின் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம் அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்துள்ளன. இதே பிரிவில் உள்ள பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவி தொடரில் இருந்து வெளியேறி உள்ளன.
தொடரை நடத்துவதோடு நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் பாகிஸ்தான் அணி களம் கண்ட நிலையில் தொடரில் இருந்தே தற்போது வெளியேறி உள்ளது. இது அந்த நாட்டு ரசிகர்களுக்கு அதிருப்தி தரும் விதமாக அமைந்துள்ளது. அணி நிர்வாகம், வீரர்களின் அணுகுமுறை என பல காரணங்களை பாகிஸ்தான் தோல்விக்கு பட்டியலிடுகின்றனர் கிரிக்கெட் விமர்சகர்கள்.
இந்திய அணி வரும் மார்ச் 4-ம் தேதி அன்று துபாயில் நடைபெறும் அரை இறுதி ஆட்டத்தில் விளையாடுகிறது. அதற்கு முன்பாக குரூப் சுற்றில் நியூஸிலாந்து அணியுடன் மார்ச் 2-ம் தேதி அன்று விளையாடுகிறது.