கோப்புப்படம் 
விளையாட்டு

ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: கால் இறுதி சுற்றில் இந்திய அணி

செய்திப்பிரிவு

கிங்டாவோ: சீனாவின் கிங்டாவோ நகரில் ஆசிய கலப்பு அணிகள் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ‘டி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் நேற்று மக்காவுடன் மோதியது. இந்த ஆட்டத்தில் இந்தியா 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய கால் இறுதி சுற்றுக்கு முன்னேறுவதை உறுதி செய்துள்ளது. தனது அடுத்த ஆட்டத்தில் இந்திய அணி, கொரியாவை எதிர்கொள்கிறது.

மக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சதீஷ் குமார் கருணாகரன், ஆத்யா வரியத் ஜோடி 21-10, 21-9 என்ற நேர் செட் கணக்கில் இயோக் சோங் லியோங் வெங் சி என்ஜி ஜோடியை வீழ்த்தியது. ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில் லக்சயா சென் 21-16, 21-12 என்ற செட் கணக்கில் பாங் ஃபோங் புய்யையும், மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் மாளவிகா பன்சோத் 21-15, 21-9 என்ற செட் கணக்கில் ஹாவோ வாய் ஷானையும் தோற்கடித்தனர்.

ஆடவர் இரட்டையர் ஆட்டத்தில் ஷிராக் ஷெட்டி, அர்ஜூன் ஜோடி 21-15, 21-19 என்ற செட் கணக்கில் சின் போன் பூய், கோக் வென் வோங் ஜோடியை வீழ்த்தியது. மகளிர் இரட்டையர் ஆட்டத்தில் ட்ரீசா ஜாலி, காயத்ரி கோபிசந்த் ஜோடி 21-10, 21-5 என்ற செட் கணக்கில் வெங் சி, புய் ஷி வா ஜோடியை வென்றது.

SCROLL FOR NEXT