கட்டாக்: இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஜேக்கப் பெத்தேல் காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து விலகி உள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் 19-ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. இதில் இங்கிலாந்து அணி தனது முதல் ஆட்டத்தில் 22-ம் தேதி ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம் பெற்றிருந்து சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஜேக்கப் பெத்தேல் விலகி உள்ளார்.
தொடை பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவர், விலகி உள்ளதாக இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு எதிராக நாக்பூரில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஜேக்கப் பெத்தேல் அரை சதம் அடித்திருந்தார். மேலும் பந்துவீச்சில் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியிருந்தார். காயம் காரணமாகவே அவர், கட்டாக்கில் நேற்று முன்தினம் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் களமிறங்கவில்லை.