செஸ் ஒலிம்பியாட்டில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலி மற்றும் நான்-பிளேயிங் கேப்டன்  நாத் நாராயணன், பயிற்சியாளர் அர்ஜூன் கல்யாண் ஆகியோருக்கு நேற்று சென்னையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் அவர்களுக்கு ரூ.40 லட்சம் ஊக்கத் தொகையை வேலம்மாள் பள்ளி தாளாளர்எம்.வி.எம்.வேல் மோகன், துணைத் தாளாளர்  ராம் ஆகியோர் வழங்கினார்கள். 
விளையாட்டு

செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்று சாதனை: குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு பாராட்டு

செய்திப்பிரிவு

சென்னை: ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் சமீபத்தில் முடிவடைந்த 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஆடவர் அணியும், மகளிர் அணியும் தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்திருந்தது.

இதில் இந்திய ஆடவர் அணியில் சென்னையை சேர்ந்த டி.குகேஷ், பிரக்ஞானந்தா ஆகியோரும் மகளிர் பிரிவில் வைஷாலியும் இடம் பெற்று இருந்தனர். மேலும் தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீநாத் நாராயணன், ஆடவர் அணிக்கு கேப்டனாகவும், அர்ஜூன் கல்யாண் மகளிர் அணிக்கு பயிற்சியாளராகவும் செயல்பட்டிருந்தனர்.

இதில் டி.குகேஷ் மேல் அயனம்பாக்கத்தில் உள்ள வேலம்மாள் வித்யாலயா பள்ளியிலும், பிரக்ஞானந்தா முகப்பேர் வேலம்மாள் பள்ளியிலும் படித்து வருகிறார்கள். மற்ற 3 பேரும் வேலம்மாள் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் ஆவார்கள். இந்நிலையில் இவர்கள் 5 பேருக்கும் வேலம்மாள் நெக்சஸ் பள்ளியின் சார்பில் சென்னை நொளம்பூரில் உள்ள வேலம்மாள் மண்டபத்தில் நேற்று பாராட்டு விழா நடத்தப்பட்டது.

இதில் குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலி ஆகியோருக்கு தலா ரூ.10 லட்சமும், ஸ்ரீநாத் நாராயணன், அர்ஜூன் கல்யாண் ஆகியோருக்கு தலா ரூ.5 லட்சமும் என மொத்தம் ரூ.40 லட்சம் ஊக்கத் தொகை வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதனை வேலம்மாள் பள்ளி தாளாளர் எம்.வி.எம்.வேல் மோகன், துணைத் தாளாளர் ஸ்ரீராம் ஆகியோர் வழங்கினர்.

விழாவில் குகேஷ் தாயார் பத்மா, பிரக்ஞானந்தா, வைஷாலியின் பெற்றோர் ரமேஷ்-நாகலட்சுமி, அர்ஜூன் கல்யாண் பெற்றோர் சரவண பிரகாஷ்-வினு ஸ்ரீநாத் நாராயணனின் பெற்றோர் நாராயணன்-பிரசன்னா ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். விழா மேடையில் தங்களது பெற்றோர்களை வீரர்களே மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தியது நெகிழும் விதமாக இருந்தது. நிகழ்ச்சியில் அரசு பள்ளி மற்றும் மாற்று திறனாளி மாணவர்கள் 1000 பேருக்கு செஸ்போர்டு வழங்கப்பட்டது.

SCROLL FOR NEXT