என்னைப் பொறுத்தவரை ஆஸ்திரேலிய ஊடகங்கள் வீரர்களை விமர்சிப்பதில் மிக மோசமானவை என்று தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டரும், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி வீரருமான ஏ.பி.டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.
சமீபத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியைச் சேர்ந்த, விராட் கோலி, டிவில்லியர்ஸ், சாஹல் ஆகியோர் தனியார் நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர். இதில் சுவாரஸ்யமான கருத்துகளை வீரர்கள் பகிர்ந்து கொண்டனர்.
அப்போது ஓவ்வொரு நாட்டிலும் ஊடகங்கள் எவ்வாறு வேறுபடுகின்றன என்ற கேள்விக்கு ஏ.பி.டிவில்லியர்ஸ் பதிலளிக்கையில், "என்னைப் பொறுத்தவரை ஆஸ்திரேலிய ஊடகங்கள்தான் மோசமானவை. ஆங்கிலப் பத்திரிகையாளர்களும் மோசமானவர்கள்தான். ஆனால் அவர்களிடம் கொஞ்சம் தெளிவு இருக்கும். அதனால் அவர்கள் தந்திரமான கேள்விகளைக் கேட்பார்கள். ஆஸ்திரேலிய பத்திரிகையாளர்களிடம் தெளிவு இருக்காது அவர்கள் மோசமானவர்கள்” என்று கூறினார்.
இதற்கு விராட்கோலி பதிலளிக்கும்போது, ” நாங்கள் இங்கிலாந்து சென்று விளையாடும்போது அவர்கள் தங்கள் நாட்டு அணியையும், எதிர் தரப்பையும் சமமாகப் பார்ப்பார்கள். இரு தரப்பையும் சமமாக விமர்சிப்பார்கள். சொல்லப்போனால் எதிர் அணி வெற்றிபெற்றால் அவர்கள் அணியைவிடக் கூடுதலாகப் பாராட்டுவார்கள்” என்றார்.
இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது.