கோப்புப்படம் 
விளையாட்டு

மைதான ஈரப்பதம் காரணமாக இந்தியா - கனடா போட்டி ரத்து | T20 WC

செய்திப்பிரிவு

லாடர்கில்: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் கனடா அணிகளுக்கு இடையிலான ‘குரூப் - ஏ’ போட்டி மைதானத்தின் ஈரப்பதம் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இரண்டு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன.

இன்று (சனிக்கிழமை) இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடர்கில் நகரில் உள்ள மைதானத்தில் இந்தியா மற்றும் கனடா அணிகள் விளையாட இருந்தன. மழைப்பொழிவு மற்றும் அதனால் மைதானத்தில் ஏற்பட்ட ஈரப்பதம் ஆகிய காரணத்தால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்திய அணி தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் சூப்பர் 8 சுற்றுக்கு ஏற்கெனவே முன்னேறிவிட்டது. கனடாவுடனான போட்டி ரத்தான காரணத்தால் 7 புள்ளிகளுடன் குரூப்-ஏ பிரிவில் முதலிடத்தில் இந்தியா முதல் சுற்றை நிறைவு செய்துள்ளது. இதே பிரிவில் இருந்து அமெரிக்கா அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளது. இதே பிரிவில் உள்ள கனடா, அயர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் முதல் சுற்றோடு வெளியேறுகின்றன.

இந்த ஆட்டம் மழையால் பாதிக்கப்படக்கூடும் என தகவல்கள் வெளியாகி இருந்தன. அதுவே தற்போது நடந்துள்ளது. வரும் 20-ம் தேதி ஆப்கானிஸ்தான் அணியுடன் ‘சூப்பர் 8’ சுற்று போட்டியில் இந்தியா விளையாட உள்ளது.

SCROLL FOR NEXT