விளையாட்டு

ஒலிம்பிக் போட்டிக்கு நேத்ரா குமணன் தகுதி: அமைச்சர் உதயநிதி வாழ்த்து

செய்திப்பிரிவு

புதுடெல்லி: வரும் ஜூலை மாதம் நடைபெற உள்ள பாரிஸ் ஒலிம்பிக்கில் பாய்மர படகு போட்டியில் கலந்து கொள்வதற்கு தமிழக வீராங்கனை நேத்ரா குமணன் தகுதி பெற்றுள்ளார்.

பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் பாய்மர படகு போட்டியில் பங்கேற்கும் 2-வது போட்டியாளராக நேத்ரா தகுதி பெற்றுள்ளார். பிரான்ஸ் நாட்டின் ஹையரெஸில் நடைபெற்ற ஒலிம்பிக் தகுதி சுற்றுக்கான இறுதி வாய்ப்பில் நேத்ரா குமணன் பங்கேற்று இந்த வாய்ப்பை உறுதி செய்துள்ளார்.

இந்த பாய்மர படகு போட்டியில் வளர்ந்து வரும் நாடுகளை சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் 67 புள்ளிகள் பெற்று டாப் 5-ல் ஒருவராக நேத்ரா தகுதி பெற்றுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலும் நேத்ரா குமணன் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உதயநிதி வாழ்த்து: நேத்ரா குமணனை வாழ்த்தி தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ELITE திட்ட வீராங்கனையான தங்கை நேத்ரா குமணன், பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கான தகுதிச்சுற்றில் வெற்றி பெற்று, 2-ஆவது முறையாக இந்தியா சார்பில் ஒலிம்பிக் படகுப்போட்டியில் களம் காணவுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு என் பாராட்டுகள்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றதன் மூலம், இந்தியாவிலிருந்து ஒலிம்பிக் படகுப் போட்டிக்கு தேர்வான முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்ற தங்கை நேத்ரா, எதிர்வரும் ஒலிம்பிக் 2024-ல் வெற்றி வாகை சூடிட என் அன்பும், வாழ்த்தும்." என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT