முலான்பூர்: நடப்பு ஐபிஎல் சீசனின் 37-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றது குஜராத் டைட்டன்ஸ் அணி. கில், சாய் சுதர்ஷன் மற்றும் ராகுல் தெவாட்டியா போன்ற பேட்ஸ்மேன்கள் குஜராத் அணியின் வெற்றிக்கு உதவினர்.
சண்டிகரில் உள்ள முலான்பூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் 142 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. 99 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து தடுமாறியது பஞ்சாப். ஷஷாங் சிங் மற்றும் அசுதோஷ் சர்மா என இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். குஜராத் அணி வீரர் சாய் கிஷோர் 4 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார்.
143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை குஜராத் டைட்டன்ஸ் அணி விரட்டியது. கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் சாஹா இணைந்து இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். சாஹா 13 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சாய் சுதர்ஷன் களத்துக்கு வந்தார். 35 ரன்கள் எடுத்த நிலையில் கில் அவுட் ஆனார். அவரை லிவிங்ஸ்டன் வெளியேற்றினார்.
தொடர்ந்து மில்லர், சாய் சுதர்ஷன், அஸ்மதுல்லா ஓமர்சாய் ஆகியோர் ஆட்டமிழந்தனர். சாய் சுதர்ஷன் 31 ரன்கள் எடுத்திருந்தார். அதன் பின்னர் ராகுல் தெவாட்டியா மற்றும் ஷாருக்கான் இணைந்து பொறுப்புடன் ஆடினர். ஹர்ஷல் படேல் வீசிய 19-வது ஓவரில் 2 விக்கெட்களை கைபற்றினார். ஷாருக் மற்றும் ரஷித் கானை அவர் அவுட் செய்தார்.
19.1 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது குஜராத். தெவாட்டியா 18 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். பஞ்சாப் அணிக்காக ஹர்ஷல் படேல் 3 விக்கெட்கள், லிவிங்ஸ்டன் 2 விக்கெட்கள், அர்ஷ்தீப் மற்றும் சாம் கரன் தலா 1 விக்கெட் வீழ்த்தி இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை சாய் கிஷோர் வென்றார்.