ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 21-வது காமன்வெல்த் போட்டியில் பளு தூக்குதல் போட்டியின் பெண்கள் பிரிவில் இந்தியாவின் மீரா பாய் சானு தங்கப்பதக்கம் வென்றார்.
ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் 21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி புதன்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது. ஏப்ரல் 15-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்தத் தொடரில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, கென்யா, மலேசியா உள்ளிட்ட 71 நாடுகளைச் சேர்ந்த சுமார் 6,600 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.
இதில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற பெண்களுக்கான பளு தூக்குதல் பிரிவில் மீராபாய் சானு இந்தியாவுக்கான முதல் தங்கப்பதக்கத்தை வென்றார்.
மணிப்பூரைச் சேர்ந்த 23 வயதான சானு 48 கிலோ எடை பிரிவில், தங்கப்பதக்கத்தைப் பெற்றுத் தந்ததுடன் காமன்வெல்த் போட்டியில் தனது புதிய சாதனையும் படைத்திருக்கிறார்.
முன்னதாக, இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 56 கிலோ பளு தூக்குதல் பிரிவில் இந்தியாவின் குருராஜா வெள்ளிப்பதக்கம் வென்றார்.
காமன்வெல்த் போட்டியில் பளு தூக்குதல் பிரிவில் பதக்கம் வென்றுள்ள மீராபாய் சானு, மற்றும் குருராஜாவுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.