விளையாட்டு

CSK vs RCB போட்டிக்கு விற்று தீர்ந்த டிக்கெட்டுகள் - அஸ்வின் முன்வைத்த கோரிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் தொடக்க போட்டிக்கான டிக்கெட்டுக்கு டிமாண்ட் ஏற்பட்டுள்ளதால் இந்திய வீரர் அஸ்வின் சிஎஸ்கே நிர்வாகத்தின் உதவியை கேட்டுள்ளார்.

ஐபிஎல் 2024 சீசன் மார்ச் 22-ம் தேதி தொடங்க உள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாட உள்ளனர். சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெறுகிறது.

இந்தப் போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வரும்நிலையில், லண்டனில் இருந்து இந்தியா திரும்பியுள்ள விராட் கோலி விரைவில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பயிற்சி முகாமில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் போட்டிக்கான டிக்கெட் இன்று ஆன்லைன் மூலம் விற்கப்பட்டது. கடந்த முறை நேரடியாக விற்பனை செய்யப்பட்டது. ஆனால் அதிகப்படியான கூட்டம் காரணமாக நிறைய சிக்கல்கள் எழுந்தன. அதனை தடுக்கும்பொருட்டு ஆன்லைன் மூலம் டிக்கெட் விற்பனை நடந்தது. எனினும், தொடங்கிய சில நிமிடங்களில் அனைத்து டிக்கெட்களும் விற்று தீர்ந்தன.

இந்நிலையில், இந்திய வீரர் அஸ்வின், "சேப்பாக்கத்தில் தொடங்கும் சிஎஸ்கே - ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான போட்டியை நேரில் காண்பதற்கான டிக்கெட்டுக்கு நம்ப முடியாத அளவுக்கு டிமாண்ட் உள்ளது. எனது குழந்தைகள் இருவரும் தொடக்க விழா மற்றும் போட்டியை பார்க்க விரும்புகிறார்கள். சென்னை அணி நிர்வாகம் உதவி செய்யவும்" என்று பதிவிட்டுள்ளார்.

தோனிக்கு இது கடைசி சீசன் என்று பேசப்படுகிறது. அதேபோல், விராட் கோலி கடந்த சில மாதங்களாக கிரிக்கெட் விளையாடவில்லை. இரண்டாவது குழந்தை பிறந்த பின் ஐபிஎல் மூலமே விளையாட உள்ளார். இதுபோன்ற காரணங்களால் சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான இந்தப் போட்டிக்கு அதிகளவு வரவேற்பு காணப்படுகிறது.

SCROLL FOR NEXT