மும்பை அணி வீரர்கள் 
விளையாட்டு

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் 105 ரன்களுக்கு சுருண்டது விதர்பா

செய்திப்பிரிவு

மும்பை: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் விதர்பா அணிக்கு எதிரான ஆட்டத்தில் வலுவான முன்னிலையை நோக்கி நகர்ந்துள்ளது மும்பை அணி.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 64.3 ஓவர்களில் 224 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. ஷர்துல் தாக்குர் சிறப்பாக பேட் செய்து 69 பந்துகளில் 75 ரன்கள் விளாசினார். இதையடுத்து பேட் செய்த விதர்பா அணி முதல் நாள்ஆட்டத்தின் முடிவில் 13 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 31 ரன்கள் எடுத்தது. அதர்வா டைடே21, ஆதித்யா தாக்கரே ரன் ஏதும் எடுக்காமல் களத்தில் இருந்தனர்.

நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய விதர்பா அணி 45.3 ஓவர்களில் 105 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதர்வா டைடே 23, ஆதித்யா தாக்கரே 19 ரன்களில் ஆட்டமிழந்தனர். இதன் பின்னர் களமிறங்கிய வீரர்களில் அதிகபட்சமாக யாஷ் ரத்தோட் 27, யாஷ் தாக்குர் 16 ரன்கள் சேர்த்தனர். மும்பை அணி தரப்பில் தவால் குல்கர்னி, ஷம்ஸ் முலானி, தனுஷ் கோட்டியன் ஆகியோர் தலா 3 விக்கெட்கள் கைப்பற்றினர்.

119 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய மும்பை அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 50 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர்களான பிரித்வி ஷா 11, பூபென் லால்வானி 18 ரன்களில் ஆட்டமிழந்தனர். முஷீர் கான் 51, கேப்டன் அஜிங்க்ய ரஹானே 58 ரன்களுடன் களத்தில் இருந்தனர். கைவசம் 8 விக்கெட்கள் இருக்க 260 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள மும்பை அணி இன்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது.

SCROLL FOR NEXT