விளையாட்டு

இந்திய மல்யுத்த சங்க தலைவராக சஞ்சய் சிங் தேர்வு: ‘மல்யுத்தத்தை விட்டு விலகுகிறேன்’ - சாக்சி மாலிக்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்திய மல்யுத்த சங்க நிர்வாகிகள் தேர்வு நேற்று நடைபெற்றது. இதில் உத்தரபிரதேச மாநில சங்கத்தின் துணைத் தலைவரான சஞ்ஜய் சிங் 40 வாக்குகள் பெற்று புதிய தலைவராக தேர்வானார். அவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் வீராங்கனையான அனிதா ஷியோரனுக்கு 7 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. சஞ்ஜய் சிங், பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட முன்னாள் தலைவரான பிரிஜ் பூஷண் சரண் சிங்கின் ஆதரவாளர் ஆவார்.

பிரிஜ் பூஷண் சரண் சிங்குக்கு எதிராக இந்திய மல்யுத்த வீராங்கனைகளான சாக்சி மாலிக், வினேஷ் போகத் ஆகியோர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக முன்னணி வீரரான பஜ்ரங் பூனியாவும் போராட்டத்தில் கலந்து கொண்டார். இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து அவர், பதவியை இழந்தார்.

போராட்டத்தின் போது பிரிஜ் பூஷண் சரண் சிங்கின் ஆதரவாளர்கள் தேர்தலில் போட்டியிடக்கூடாது என சாக்சி மாலிக் உள்ளிட்ட வீராங்கனைகள் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அணுராக் தாக்குர் ஏற்றுக்கொண்டிருந்தார்.

13 பேர் வெற்றி: இந்நிலையில் பிரிஜ்பூஷண் சரண் சிங் ஆதரவாளரான சஞ்ஜய் சிங் புதிய தலைவராக தேர்வாகி உள்ளது போராட்டம் நடத்திய மல்யுத்த வீராங்கனைகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. 15 நிர்வாகிகளை தேர்வு செய்வதற்காக நடைபெற்ற தேர்தலில் பிரிஜ் பூஷண் சரண் சிங்கின் ஆதரவாளர்கள் 13 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

‘மல்யுத்தத்தை விட்டு விலகுகிறேன்’ - சாக்சி மாலிக்: இந்திய மல்யுத்த சங்கத்தின் தலைவராக சஞ்ஜய் சிங் தேர்வாகி உள்ள நிலையில், சாக்சி மாலிக் மல்யுத்த போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், கண்ணீர் மல்க கூறும்போது,“நாங்கள் எங்கள் இதயத்திலிருந்து போராடினோம், ஆனால் பிரிஜ் பூஷனின் வணிக கூட்டாளியும் அவரது நெருங்கிய உதவியாளருமான சஞ்சய் சிங் தலைவராக தேர்வாகி உள்ளார். இதனால் நான், மல்யுத்தத்தை விட்டு விலகுகிறேன். நாங்கள், ஒரு பெண் தலைவராக வரவேண்டும் என விரும்பினோம். ஆனால் அது நடக்கவில்லை” என்றார்.

SCROLL FOR NEXT