திருவாரூர்: ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 19-ம் தேதி தொடங்கியது. இதில் 4x400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய ஆடவர் அணி வீரர்கள் 2.59.05 நிமிடங்களில் இலக்கை கடந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
மூன்று நிமிடங்களுக்குள் இலக்கை அடைந்த ஆசிய அணி என்ற சாதனையை இந்தியா இதன் மூலம் படைத்துள்ளது. பல்வேறு தரப்பினர் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஸ்டாலின் ஆகியோரும் இந்திய அணியின் சாதனையை போற்றியுள்ளனர். திங்கள் அன்று காலை 1.07 மணி அளவில் இறுதிப்போட்டியில் இந்தியா விளையாட உள்ளது.
“உலக தடகள சாம்பியன்ஷிப்பில் வரலாற்றுச் சாதனை புரிந்துள்ள இந்திய ஆடவர் 4x400 தொடர் ஓட்ட அணியினரைப் போற்றுகிறேன்.
ஆசிய அளவிலான புதிய சாதனையைப் படைத்து, ஓட்டப்பந்தயத்தில் பல முன்னணி நாடுகளை வீழ்த்தி, இறுதிப் போட்டிக்குள் நமது அணியினர் நுழைந்துள்ளனர்.
இதற்காக, முகம்மது அனஸ் யாஹியா, அமோஜ் ஜேக்கப், முகம்மது அஜ்மல் மற்றும் நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரரான ராஜேஷ் ரமேஷ் ஆகிய நால்வருக்கும் அவர்களது அபாரமான ஓட்டத்துக்காகப் பாராட்டுகள்” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.