காமன்வெல்த் போட்டியில் இந்திய மகளிர் அணி 14-0 என்ற கோல் கணக்கில் டிரினிடாட் அண்ட் டோபாக்கோ அணியை வீழ்த்தியது.
இதில் முதல் பாதியில் 9 கோல்களும், இரண்டாவது பாதியில் 5 கோல்களும் அடிக்கப்பட்டன. ஆட்டம் தொடங்கிய 4-வது நிமிடத்திலேயே வந்தனா கட்டாரியா கோல் அடித்து கணக்கை தொடங்கி வைத்தார். தொடர்ந்து தீபிகா தாகூர், ராணி ராம்பால், ஜஸ்பிரீத் கவூர் ஆகியோர் தலா மூன்று கோல்களை அடித்தனர். ரீது ராணி, அனுராதா, அனுபா பார்லா, ரிதுஷா ஆர்யா ஆகியோர் தங்கள் பங்குக்கு தலா ஒரு கோல் அடித்தனர்.
ஆட்டம் முழுவதுமே இந்திய வீராங்கனைகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. டிரினிடாட் வீராங்கனைகளால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. புதன்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியை இந்திய மகளிர் எதிர்கொள்ள இருக்கின்றனர்.
இந்திய அணி இதுவரை 3 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகளையும் ஒரு தோல்வியையும் பெற்றுள்ளது. முதல் ஆட்டத்தில் 4-2 என்ற கோல் கணக்கில் கனடாவை வென்றது. இரண்டாவது ஆட்டத்தில் நியூஸிலாந்திடம் 0-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தினால் அரையிறுதிக்கு இந்தியா எளிதாக முன்னேற வாய்ப்புள்ளது.