சென்னை: ஸ்குவாஷ் உலகக் கோப்பை தொடர் சென்னையில் நடைபெற்று வருகிறது. இதன் அரை இறுதி ஆட்டத்தில் நேற்று நடப்பு சாம்பியனான எகிப்து, ஜப்பானை எதிர்த்து விளையாடியது. இதில் எகிப்து 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அந்த அணி சார்பில் கரீம் எல் ஹம்மாமி, ஃபைரூஸ் அபோல்கெய்ர், அலி அபோ எலினென், கென்சி அய்மன் ஆகியோர் வெற்றியை பதிவு செய்தனர்.
மற்றொரு அரை இறுதி ஆட்டத்தில் போட்டியை நடத்தும் இந்தியா, மலேசியாவை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 0-3 என்ற கணக்கில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் தோல்வி அடைந்தது. ஜோஷ்னா சின்னப்பா 1-3 என்ற கணக்கில் அய்ரா அஸ்மானிடமும், அபய் சிங் 2-3 என்ற கணக்கில் சாய் ஹங்கிடமும், சவுரவ் கோஷல் 1-3 என்ற கணக்கில் டேரன் பிரகாசத்திடமும் வீழ்ந்தனர். போட்டி தரவரிசையில் 4-வது இடத்தில் மலேசியாவிடம் 2-வது இடத்தில் உள்ள இந்திய அணி தோல்வி அடைந்தது ரசிகர்களை ஏமாற்றம் அடையச் செய்தது.