லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் சுப்மன் கில்லுக்கு கொடுக்கப்பட்ட அவுட் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் நான்காவது நாளான இன்று இந்தியாவுக்கு 444 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா. இலக்கை துரத்தும் முனைப்பில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மாவும், சுப்மன் கில்லும் களமிறங்கினர். இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் சுப்மன் கில் 18 ரன்களில் இருந்தபோது ஸ்காட் போலண்ட் வீசிய பந்து கேமரூன் கிரீன் கைக்கு சென்றது.
கேமரூன் கிரீன் கேட்ச் பிடிக்கும்போது பந்து மைதானத்தில் படுவதுபோல் தெரிந்ததால் கள நடுவர்கள் 3-வது நடுவரின் முடிவுக்கு சென்றனர். அப்போது ரீப்ளேவில் கேமரூன் கிரீன் பந்தை பிடிக்கும் போது பந்து தரையில் பட்டதுபோல் தெரிந்தது. மூன்றாம் நடுவர் சுப்மன் கில் அவுட் ஆகிவிட்டதாக அறிவித்தார். நாட் அவுட்டை அவுட் என நடுவர் அறிவித்தது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. நடுவரின் முடிவு தவறானது என கூறி ட்விட்டரில் நெட்டிசன்கள் கொந்தளித்து வருகின்றனர்.
நெட்டிசன் ஒருவர், கேமரூன் கிரீன் பிடித்த கேட்ச் புகைப்படத்தை பதிவிட்டு நாட் அவுட் என தெரிவித்துள்ளார்.
மற்றொருவர், “நாட் அவுட் கொடுத்திருக்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.
அனுஷ்மான் என்பவர், “தெளிவாக தெரிகிறது இது நாட் அவுட். இந்த முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது” என பதிவிட்டுள்ளார்.
தற்போது இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்களை சேர்த்துள்ளது. களத்தில் விராட் கோலியும், ரஹானேவும் களத்தில் உள்ளனர்.