லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்களின் வேகபந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாறிவருகின்றனர்.
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 327 ரன்கள் குவித்தது. ட்ராவிஸ் ஹெட் சதமடித்தார். முதல் ஆட்ட நேர முடிவில் ஹெட் 146 ரன்னுடனும், ஸ்மித் 95 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இரண்டாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கிய சிறிது நேரத்தில் ஸ்டீவன் ஸ்மித் சதமடித்தார். அணிக்கு பக்கபலமாக இருந்த ட்ராவிஸ் ஹெட் 163ரன்களில் அவுட்டானார். ஸ்மித் 121 ரன்களில் வெளியேறினார். அலெக்ஸ் கேரி மட்டும் 48 ரன்களைச் சேர்த்த நிலையில் மற்ற வீரர்கள் யாரும் சோபிக்காததால் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 469 ரன்களை குவித்து ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் சிராஜ் 4 விக்கெட்டும், ஷமி, ஷர்துல் தாக்குர் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா, சுப்மன் கில் களமிறங்கினர். இதில் பேட் கம்மின்ஸ் வீசிய 6-வது ஓவரில் எல்பிடபள்யூ முறையில் 15 ரன்களில் அவுட்டானார் ரோஹித். அவரைத் தொடர்ந்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சுப்மன் கில் அடுத்த ஓவரிலேயே 13 ரன்களில் போல்டாகி வெளியேறினார். புஜாரா, 14 ரன்களில் கேமரூன் கிரீன் வீசிய பந்தை பேட்டை தாண்டி அனுமதித்த விளைவு அவரும் போல்டாக விரால் கோலி இருக்கிறார் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால் புஜாராவின் அதே 14 ரன்களில் விராட் கோலியும் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்ப அணி தடுமாறியது.
தற்போது இந்திய 4 விக்கெட் இழப்புக்கு 88 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. ரஹானே 17 ரன்களுடனும், ஜடேஜா 8 ரன்னுடனுடம் களத்தில் உள்ளனர்.