புதுடெல்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்.பி-யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து இந்திய மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் வீரர்கள் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், எதிர்க்கட்சிகள் மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் வீரர்களை தவறாக வழிகாட்டுவதாக மல்யுத்த வீராங்கனையும், பாஜக-வை சேர்ந்தவருமான பபிதா போகத் தெரிவித்துள்ளார்.
“மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் வீரர்கள் தவறாக வழிநடத்தப்படுகின்றனர். நான் மட்டும் அங்கு இருந்தால் இதை நடக்க விட்டிருக்க மாட்டேன். சக வீராங்கனைகள் மற்றும் வீரர்களின் காலில் விழுந்தாவது இதை தடுத்திருப்பேன். இப்படி அவர்கள் நடத்தப்படுவதில் எனக்கு வருத்தம் தான்.
அவர்கள் வென்ற பதக்கங்களை நதியில் வீச யார் பரிந்துரைத்தார்களோ அது அவர்களது சுயநலத்திற்காக மட்டும் தான். அதில் மல்யுத்த வீரர்களுக்கு எந்த நலனும் இல்லை. அவர்கள் தவறாக வழிநடத்தப்படுகின்றனர். போலீசார் கைது செய்ய வந்த போது அவர்கள் ஓட்டம் பிடித்துவிட்டனர். மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அரசின் மீதும், நீதித்துறையின் மீதும் நம்பிக்கை வைக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.