புதுடெல்லி: பிஹாரின் கிழக்கு சம்பாரன் மாவட்டம் கேசரியா நகரில் விராட் ராமாயண கோயில் கட்டப்பட்டு வருகிறது. கோயில் வளாகத்தில் 33 அடி உயரத்தில் உலகின் மிகப்பெரிய சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
இந்த லிங்கம், தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் வடிவமைக்கப்பட்டது. சுமார் 210 டன் எடை கொண்ட இந்த சிவலிங்கம், ஒரே பாறையில் செதுக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் உள்ள பட்டிக்காடு கிராமத்தைச் சேர்ந்த சிற்பக் கலைஞர்கள் இதை செதுக்கி உள்ளனர். இதற்காக அவர்கள் சுமார் 10 ஆண்டுகள் எடுத்துக்கொண்டனர்.
மாமல்லபுரத்தில் இருந்து இந்த லிங்கம் 96 சக்கரங்கள் கொண்ட லாரி மூலம் சுமார் 47 நாட்கள் பயணத்துக்கு பிறகு கடந்த திங்கள் கிழமை கேசரியாவை வந்தடைந்தது. இந்தப் பயணத்தின் போது அந்த லாரி எங்கு நின்றாலும், அதைப் பார்க்க பெரும் கூட்டம் கூடியது. கேசரியா வந்த தகவலைக் கேட்டு லிங்கத்தை காண தினமும் ஏராளமானோர் குவிகின்றனர்.
ஜனவரி 17-ம் தேதி இந்த லிங்கத்துக்கு பிராண பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. பிறகு நிபுணர்களின் மேற்பார்வையில் சிவலிங்கம் நிறுவப்பட உள்ளது. ஹரித்வார், பிரயாக்ராஜ், கங்கோத்ரி, கைலாஷ் மானசரோவர், சோன்பூர் ஆகிய இடங்களில் இருந்து 5 நதிகளின் நீர் சிவலிங்கத்தின் அபிஷேகத்துக்காக கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த சிவலிங்கம் 'சஹஸ்ரலிங்கம்’ என அழைக்கப்படுகிறது. இதில் 1008 சிறிய லிங்கங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இந்த சிவலிங்கத்துக்கு நீர் அபிஷேகம் செய்தால், 1008 சிவலிங்கங்களுக்கு அபிஷேகம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. விராட் ராமாயண கோயிலின் மொத்தப் பரப்பளவு 120 ஏக்கர் ஆகும். இது, 2,800 அடி நீளமும் 1,400 அடி அகலமும் கொண்டதாக இருக்கும்.