ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியதையொட்டி வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் வேளாங்கண்ணி பேராலயம்.
நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழா நேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் மத்தியில் கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர் பவனி செப்.7-ம் தேதி நடைபெற உள்ளது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா ஆண்டுதோறும் ஆக.29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்.8-ம் தேதி வரை நடைபெறும். அதன்படி, நடப்பாண்டு விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக பேராலய வளாகத்தில் தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் கொடியை புனிதம் செய்து வைத்தார். அதைத்தொடர்ந்து புறப்பட்ட கொடி ஊர்வலம் கடைவீதி, கடற்கரை, ஆரியநாட்டுத் தெரு வழியாகச் சென்று மீண்டும் பேராலயம் வந்தடைந்தது.
அங்கு திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் கொடிக்கம்பத்தில் தஞ்சை மறைமாவட்ட ஆயர் சகாயராஜ் கொடியை ஏற்றினார். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் ‘மரியே வாழ்க’ என விண்ணதிர முழக்கமிட்டனர். தொடர்ந்து, வாணவேடிக்கை நடைபெற்றது. பின்னர் திருத்தல கலையரங்கில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசி, தமிழில் திருப்பலி நிறைவேற்றுதல் ஆகியவை நடைபெற்றன. இதில் பேராலய அதிபர் இருதயராஜ், பங்குத் தந்தைகள், அருட் சகோதரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இன்று (ஆக.30) முதல் செப்.7-ம் தேதி வரை தினமும் காலை 5 மணிக்கு பேராலயம், விண்மீன் ஆலயம், மாதாகுளம் ஆலயம், மேல்கோயில், கீழ்கோயில் ஆகிய இடங்களில் வழிபாடுகள், திருப்பலிகள் நடைபெறும். தமிழ், மராத்தி, ஆங்கிலம், கொங்கனி, கன்னடம், தெலுங்கு, இந்தி, கிழக்கத்திய மராத்தி ஆகிய மொழிகளில் இரவு, பகலாக சிறப்பு திருப்பலிகள் நடைபெறும். மேலும் 8-ம் தேதி விண்மீன் ஆலயத்தில் அன்னையின் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. தொடர்ந்து, கொடியிறக்கம் செய்யப்பட்டு விழா நிறைவு பெறுகிறது. விழாவை முன்னிட்டு 4 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் 2,432 காவலர்கள், 378 போக்குவரத்து காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டுஅறை அமைக்கப்பட்டுள்ளது. சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.