திருமலை: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று அதிகாலை 12.05 மணிக்கு திருமலையில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
வைகுண்ட ஏகாதசியையொட்டி திருமலை ஏழுமலையான் கோயிலில் மூலவருக்கு புதிய பட்டாடை உடுத்தப்பட்டது. அதிகாலை ஆண்டாள் அருளிய திருப்பாவை பாடப்பட்டது. கோயில் முழுவதும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
ஏழுமலையானை தரிசனம் செய்ய டிசம்பர் 30,31 மற்றும் ஜனவரி 1 ஆகிய 3 நாட்களில் குலுக்கல் முறையில் டிக்கெட்டுகள் பெற்ற பக்தர்கள் மட்டுமே சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். டிக்கெட் இல்லாத பக்தர்கள் ஜன.2-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை சொர்க்க வாசல் தரிசனத்திற்கு அனுமதிப்போம் என சொல்லி சமாதானப்படுத்தினர்.
நேற்று காலை 9 மணியில் இருந்து 10.30 மணி வரை, உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் மலையப்பர் தங்க ரதத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது தேரை திரளான பெண் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். மாட வீதிகளில் பக்தர்கள் திரண்டு சுவாமியை கோவிந்தா... கோவிந்தா என கோஷமிட்டவாறு வழிபட்டனர்.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருமலையில் அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. முகப்பு கோபுரம், பலிபீடம், கொடிமரம் மற்றும் உப சன்னதிகள் என கோயில் முழுவதும் பழங்கள் மற்றும் வண்ண மலர்களால் ஆலங்காரம் செய்யப்பட்டிருந்தது. 10 நாட்களுக்கு 50 டன் மலர்கள் 10 டன் பழங்கள் உபயோகப்படுத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலை போன்ற மாதிரியை ஏழுமலையான் கோயிலில் தேவஸ்தான தோட்டக்கலை துறையினர் ஏற்பாடு செய்திருந்தனர். இது பக்தர்களை வெகுவாக கவர்ந்தது. இன்று துவாதசியை முன்னிட்டு,
திருமலையில் அதிகாலை 4.30 மணிக்கு சக்கர ஸ்நானம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை திருப்பதி தேவஸ்தானம் செய்துள்ளது.
விஐபிக்கள் படையெடுப்பு: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபிக்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனர். தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு, ஆந்திர அமைச்சர்கள் அச்சன் நாயுடு, கேஷவ், கொண்டபல்லி ஸ்ரீநிவாஸ், கொல்லா ரவீந்திரா, கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, நடிகர் ரோஹித், நடிகை ஸ்ரீ லீலா, சிவாஜி உட்பட பலர் தங்களின் குடும்பத்தாருடன் ஏழுமலையானை தரிசித்தனர். இவர்கள் அனைவருக்கும் தேவஸ்தான அதிகாரிகள் தரிசன ஏற்பாடுகளை செய்து, தீர்த்த பிரசாதங்களை வழங்கினர்.