ஆன்மிகம்

பழநி முருகன் கோயில் சிவன் சன்னதிகளில் பொருத்த ரூ.2.22 கோடி மதிப்பிலான வெள்ளி நன்கொடை

ஆ.நல்லசிவன்

பழநி: பழநி முருகன் கோயிலில் உள்ள சிவன் சன்னதிகளில் பொருத்துவதற்காக ரூ.2.22 கோடி மதிப்பிலான வெள்ளியை இரண்டு பக்தர்கள் நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் பல்வேறு திருப்பணிகளுக்காக நன்கொடை வழங்குகின்றனர்.

அந்த வகையில், பழநி மலைக்கோயிலில் மூலவர் சன்னதிக்கு அருகில் 2 சிவன் சன்னதிகள் உள்ளன. இந்த இரண்டு சன்னதி முழுவதும் வெள்ளித்தகடு பொருத்த கோயில் நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக, ரூ.2.22 கோடி மதிப்பிலான 89 கிலோ எடையிலான பல்வேறு வேலைப் பாடுகளுடன் கூடிய வெள்ளித் தகடுகளை 2 பக்தர்கள் திங்கட்கிழமை (செப்.7) காலை நன்கொடையாக வழங்கினர்.

இதனை, கோயில் இணை ஆணையர் (பொ) வெங்கடேஷ், அறங்காவலர் குழுத் தலைவர் கே.எம். சுப்பிரமணியன், உறுப்பினர் சு.பாலசுப்பிரமணி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். அதனை தொடர்ந்து, வெள்ளித் தகடுகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, சிவன் சன்னதிகளில் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT